மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 206 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பா.ஜ.க தயாராகி வருகிறது. இத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அளித்துள்ள பேட்டியில், ”நாங்கள் தேர்தலில் தோல்வி அடையவில்லை. எனவே நான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யமாட்டேன். எங்களிடமிருந்து கட்டாயப்படுத்தி பா.ஜ.க ஆட்சியை பறித்து இருக்கிறது. எனவே ராஜினாமா செய்ய ராஜ்பவன் செல்ல மாட்டேன். மத்திய அரசாங்கமும், தேர்தல் ஆணையமும் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மோசமான விளையாட்டுகளில் ஈடுபடுகிறது. திரிணாமுல் கட்சியின் உண்மையான எதிரி தேர்தல் ஆணையமே தவிர, பாஜக அல்ல. தேர்தல் ஆணையம்தான் வில்லன். அவர்கள் மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் தேர்தலை திருடியது போன்று மேற்கு வங்கத்திலும் திருடி இருக்கிறார்கள். இது ஜனநாயகம் செயல்படும் விதமல்ல.

நீதித்துறை இல்லாதபோது, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படும்போது, அரசாங்கம் ஒற்றைக் கட்சி ஆட்சியை விரும்பும்போது, உலகிற்கு ஒரு தவறான செய்தி சென்றடைகிறது.
நான் வாக்குச்சாவடிக்கு சென்றபோது என் வயிறு மற்றும் முதுகில் எட்டி உதைத்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமரா அணைக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து நான் வெளியே தள்ளப்பட்டேன். ஒரு பெண்ணாக, என்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டனர்.
மத்தியப் படைகளே இப்படி நடந்துகொள்ள முடியுமென்றால், எனக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. மத்தியில் முன்பு அமைந்த பாஜக அரசுகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட ஒன்றை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இந்தியா’ (INDIA) கூட்டணியின் தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரிணாமுல் கட்சியினர் தாக்கப்படும் இடங்களுக்கும், கட்சியின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ள இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக, ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரைக் கொண்ட ஒரு உண்மை கண்டறியும் குழுவை கட்சி அமைக்கும்” என்று அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுப்பதால் அவரை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்க சட்டமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு நாளில் முடிகிறது. இது குறித்து மூத்த வழக்கறிஞர் சேகர் நஃபாடே கூறுகையில்,” மம்தா பானர்ஜியின் எதிர்ப்பு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டதால், ஆளுநரால் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க முடியும். பதவி விலக மறுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் முடிவு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது” என்று அவர் விளக்கினார். மம்தா பானர்ஜிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை மேற்கு வங்க தேர்தல் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.