தமிழக அரசியல் சூழல் தற்போது பரபரப்பாக இருக்கிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திடீரென ஆளுநர் மாளிகை வந்து, “அமமுக சார்பில் வென்ற காமராஜ், தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகப் போலிக் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய எம்.எல்.ஏவை இப்போது காணவில்லை. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது’ எனக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
பிறகு, காணாமல் போனதாகச் சொன்ன அதே எம்.எல்.ஏவுடன் ஆளுநரைச் சந்திக்க நள்ளிரவில் வந்தார் டிடிவி தினகரன்.

அப்போது அவர், “காமராஜ் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் (Resort) அதிமுக எம்.எல்.ஏக்களோடு தங்கியிருந்தார். அங்கு ‘எடப்பாடி ஆட்சி அமைய’ ஆதரவு தெரிவித்துக் கடிதத்தில் கையெழுத்திட்டுவிட்டு என்னைச் சந்திக்கப் புறப்பட்டிருக்கிறார்.
தவெகவிற்கு 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது. அதனால் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள். அமமுகவிற்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார், எனவே கட்சித்தாவல் தடைச் சட்டம் வராது என யோசித்துத் தவெகவினர் போலிக் கடிதத்தைத் தயார் செய்திருக்கின்றனர்” எனப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தவெக தரப்பிலிருந்து, “யாரிடம் பேரம் பேச வேண்டிய அவசியம் தவெகவிற்கு இல்லை. காமராஜ் சுயநினைவோடு மகிழ்ச்சியாகத்தான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்” எனக் காமராஜ் கடிதத்தில் கையெழுத்திட்ட வீடியோவை வெளியிட்டது மேலும் பரபரப்பை உண்டாக்கியது. அது தொடர்பாகத் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் டிடிவி.