India
oi-Vigneshkumar
ஜெய்ப்பூர்: பள்ளியின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்வதற்காக கிராமத்துக்கு சென்ற கரப்பான் பூச்சி கட்சதி நிர்வாகிகள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகி ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பின்னணியில் பாஜக இருப்பதாக கரப்பான் பூச்சி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் போராட்டம் நடத்தி நாடு முழுக்க கவனத்தை ஈர்த்தது கரப்பான் பூச்சி கட்சி! அந்த போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுக்க உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று கரப்பான் பூச்சி கட்சியினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்படி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராம்புரா கன்வார்புரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை கரப்பான் பூச்சி கட்சியினர் ஆய்வுக்கு சென்றனர்.

என்ன நடந்தது
கரப்பான் பூச்சி கட்சியின் இணை நிறுவனர் ஆசுதோஷ் ரங்கா தலைமையிலான குழுவினர், அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்வதற்காக கிராமத்துக்கு சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் கரப்பான் பூச்சி கட்சியினர் கிராமத்துக்குள் நுழைய முயன்றபோது ஏராளமானோர் அவர்களை சூழ்ந்து கொண்டு கோஷமிடுவதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தெரிகிறது. சிலர் அவர்களை தாக்க முயல்வதும் பதிவாகியுள்ளது. கரப்பான் பூச்சி கட்சியினரை நிர்வாகிகளை ‘அர்பன் நக்சல்கள்’, ‘தேச விரோதிகள்’, ‘பாகிஸ்தானியர்கள்’ என்றும் சிலர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில், கரப்பான் பூச்சி கட்சியினர் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. இந்த தாக்குதலுக்கு பாஜகவை கரப்பான் பூச்சி கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பாஜக தான் காரணம்
இது தொடர்பாக ஆசுதோஷ் ரங்கா கூறுகையில், “கிராம மக்களே பள்ளியை ஆய்வு செய்ய எங்களை அழைத்தனர். அந்த அரசு பள்ளி பல ஆண்டுகளாக மாட்டு தொழுவத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டும் அந்த பள்ளியை ஆய்வு செய்தோம். இப்போதும் ஆய்வுக்கு வருவது குறித்து போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நாங்கள் கிராமத்துக்கு சென்றபோது பாஜகவை சேர்ந்தவர்கள் அங்கு தயாராக இருந்தனர். எங்களை திடீரென சூழ்ந்து கொண்டர். சில தொண்டர்கள் தாக்கப்பட்டனர். மேலும், கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. செல்போனை பிடுங்கி சேதப்படுத்தினர். குறிப்பாக பெண் ஒருவர் இதில் காயமடைந்தார். எனது சட்டையும் கிழித்துவிட்டனர். மேலும், ஒருவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதேநேரம் இந்த சம்பவத்திற்கு நாங்கள் கிராம மக்களை குறைகூற விரும்பவில்லை. வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வந்து வன்முறையை தூண்டியுள்ளனர். உள்ளூர் பாஜக கவுன்சிலர் சிலருக்கு பணம் வழங்கி வன்முறையில் ஈடுபட வைத்துள்ளார்” என குற்றஞ்சாட்டினார்.
மறுப்பு
இருப்பினும், இதை பாஜகவை சேர்ந்த ஜெய்ப்பூர் எம்எல்ஏ சுவாமி பால்முகுந்தாச்சார்யா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர், “கரப்பான் பூச்சி கட்சியினர் வருவதை கிராம மக்கள் விரும்பவில்லை. கிராம மக்களே அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். குழந்தைகளின் கல்வியில் குழப்பத்தை ஏற்படுத்தும் கரப்பான் பூச்சி கட்சியினர் முயல்கிறார்கள்” என்று அவர் குற்றம்சாட்டினார்.
பரபரப்பு
பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகி சிவாங்கி சர்மா தெரிவித்தார். தான் அந்த பகுதியிலேயே பிறந்து வளர்ந்தவர் என்ற போதிலும், தன்னை ‘பாகிஸ்தானியர்’, ‘நக்சல்’ என்று அழைத்ததாக அவர் வேதனை தெரிவித்தார். கரப்பான் பூச்சி கட்சியினர் திடீரென தாக்குதலுக்கு உள்ளானதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

