'எவ்வளவு அடிச்சாலும் பத்தல; ஒண்ணுமே புரியலங்கய்யா!' – குழம்பிய ராஜஸ்தான்; அடிதடி சன்ரைசர்ஸ்!

Spread the love

“என்னதான் ஆச்சு நம்ம ஐபிஎல்லுக்கு?” – இதுதான் இப்போதிருக்கும் பழைய ஐபிஎல் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஒரு காலத்தில் 150 ரன்கள் எடுத்தாலே “கெத்தா” டிஃபெண்ட் செய்யலாம் என்று நினைத்த காலம் போய், இப்போது 250 ரன்கள் எடுத்தாலும் “இதெல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை” என இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் போதே மேட்சை முடித்து விடுகிறார்கள்.

RR vs SRH
RR vs SRH

நேற்று நடந்த இரண்டு போட்டிகளும் அப்படியே ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ படம் பார்த்த உணர்வைத் தந்தது. முதல் ஆட்டத்தில் டெல்லி அடித்த 264 ரன்களை, பஞ்சாப் அணி 19-வது ஓவரிலேயே அசால்ட்டாக எட்டிப்பிடித்தது. இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 228 ரன்களைக் குவித்து “ஜெயிச்சிட்டோம்” என நினைத்திருக்க, அதையும் 19-வது ஓவரிலேயே தூக்கி சாப்பிட்டது ஹைதராபாத்!

காயத்தால் ஓய்வில் இருந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் ஏழு போட்டிகளுக்குப் பிறகு களம் இறங்கியதே ஹைதராபாத் அணிக்கு ஒரு தனி தெம்பைக் கொடுத்தது. “எத்தனை ரன் அடிச்சாலும் நாங்க சேஸ் பண்ணுவோம்” என்ற தெம்போடு பந்துவீச்சைத் தேர்வு செய்தார் கம்மின்ஸ்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், இளம் புயல் வைபவ் சூர்யாவன்ஷி ஆடிய ஆட்டம் இருக்கிறதே… அது அக்மார்க் சரவெடி! கடந்த போட்டியில் முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளைத் தூக்கிய பிரபுல் ஹிங்கேயின் பந்துவீச்சை, மூன்று சிக்சர்களுடன் வரவேற்று ‘ட்ரீட்மென்ட்’ கொடுத்தார் வைபவ்.

Sooryavanshi
Sooryavanshi

வெறும் 37 பந்துகளில் 104 ரன்கள்.

மொத்தம் 12 மெகா சிக்சர்கள்.

பேட் கம்மின்ஸ் பந்தையும் விட்டுவைக்காமல் லெக் சைடில் சிதறடித்தார்.

ராஜஸ்தான் அணி 270 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்த்த நிலையில், வைபவ் அவுட்டான பிறகு ஸ்கோர் வேகம் குறைந்தது. கேப்டன் ரியான் பராக் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் தடுமாறியதால், ராஜஸ்தான் 228 ரன்களோடு நின்றது.

260+ ரன்களையெல்லாம் பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு 229 என்ற இலக்கு சாதாரணமாகத் தெரிந்தது. முதல் ஓவரிலேயே ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை ஜோப்ரா ஆர்ச்சர் தூக்கியதும் ராஜஸ்தான் பக்கம் காற்று வீசுவது போல் தெரிந்தது. ஆனால், அதன் பிறகு களம் இறங்கிய இஷான் கிஷன் – அபிஷேக் சர்மா ஜோடி மைதானத்தின் நாலாபுறமும் பந்தைப் பறக்கவிட்டனர்.

13-வது ஓவரிலேயே ஸ்கோர் 150-ஐத் தாண்டியது. இடையில் விக்கெட்டுகள் விழுந்து சிறு பரபரப்பு ஏற்பட்டாலும், 9 பந்துகள் மீதமிருக்கும் போதே இலக்கை எட்டிப் பிடித்து, பாயிண்ட்ஸ் டேபிளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Ishan Kisahn
Ishan Kishan

நேற்று ஒரே நாளில் மட்டும் ‘ஆரஞ்சு கேப்’ மூன்று பேரிடம் கை மாறியதுதான் ஹைலைட்.

முதலில் கே.எல். ராகுல்.

இரண்டாவது போட்டியில் வைபவ் சூர்யாவன்ஷி. அடுத்த சில நிமிடங்களிலேயே அபிஷேக் சர்மா.

இப்படி ஓவர் ஓவருக்கு மாறும் இந்த ஆரஞ்சு தொப்பி, இறுதியில் யாரிடம் தங்கும் என்பதுதான் இப்போது ஐபிஎல் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *