பாதுகாப்பு ஒத்துழைப்பே இந்தப் பயணத்தின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான ‘ஆஸ்த்ரா’ வான்வழித் தாக்குதல் ஏவுகணைகளை இறக்குமதி செய்ய இந்தோனேசியா முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, ஆஸ்த்ரா ஏவுகணைகளின் செயல்திறனை இந்தியா வெற்றிகரமாக நிரூபித்ததே இந்தோனேசியாவின் இந்த ஆர்வத்திற்குக் காரணம்.
ஏற்கனவே இந்தியாவிடமிருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வாங்கியுள்ள இந்தோனேசியா, தற்போது அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விரும்புகிறது. இதற்காகக் கூடுதல் பிரமோஸ் ஏவுகணை பேட்டரிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியான கூட்டு ராணுவப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவு கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது.
ஏவுகணைகள் மட்டுமல்ல… பொருளாதாரப் பாதுகாப்புக்கும் இந்தப் பயணம் வழிவகுக்கிறது. எஃகு, நிக்கல் மற்றும் அரிய வகை உலோகங்கள் போன்ற முக்கிய கனிமங்களின் உற்பத்தியில், இந்தோனேசியாவில் இந்தியா முதலீடு செய்ய உள்ளது. இது, சீனாவின் பிடியில் இருக்கும் முக்கிய கனிம விநியோகச் சங்கிலிக்கு ஒரு மாற்றை உருவாக்கும் இந்தியாவின் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
இதைத் தாண்டி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வியூக நகர்வாக, மலாக்கா ஜலசந்தியை ஒட்டியுள்ள சபாங் துறைமுகத்தை இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து மேம்படுத்த உள்ளன. இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு மிக அருகில், சுமார் 100 மைல் தொலைவில் இந்தத் துறைமுகம் அமைந்திருப்பது இதன் ராணுவ முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.
இந்தப் பயணத்தின் ஆச்சரியமூட்டும் அம்சம், தேர்தல் தொழில்நுட்பப் பரிமாற்றம். இந்தோனேசியாவின் தேர்தல் முறைக்கு ஏற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVMs) உருவாக்க இந்தியா தொழில்நுட்ப உதவி வழங்க உள்ளது. இது இந்தியாவின் தேர்தல் மேலாண்மை முறைக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவும், இரு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நிறுவன ஒத்துழைப்பின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது.
“இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழ்ந்த நம்பிக்கை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நீடித்த நட்புறவை வலுப்படுத்தும் அதே வேளையில், முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை இந்தப் பயணம் திறந்துள்ளது,” என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 6 முதல் 8 வரை நடைபெறும் இந்தப் பயணம், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு வலுவான கூட்டாளியை உறுதி செய்வதற்கும் இந்தியா எடுக்கும் மிக முக்கியமான முயற்சி.!