I Nobody: “உலகளவில் பெண்களின் உரிமைகள் குறைந்து வருகின்றன" – நடிகை பார்வதி திருவொத்து

Spread the love

பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ, நோபடி’ (I, Nobody) திரைப்படம் ஜூலை 9-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தை ஒரு கொள்ளை சம்பவ பின்னணி க்ரைம் த்ரில்லர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், படத்தில் அதைத் தாண்டியும் பல விஷயங்கள் உள்ளன என்று நடிகை பார்வதி திருவொத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற எக்ஸ்பிரெஸோ (Expresso) நிகழ்ச்சியின் 15-வது பதிப்பில் கலந்துகொண்ட அவர், “இந்தத் தலைப்பிலேயே ஒரு சுவாரசியம் ஒளிந்துள்ளது. இது எனது சொந்த வாழ்க்கைப் பயணத்தோடும் ஒத்துப்போகிறது. நாம் ஏதோ ஒரு தளத்தில் நம் திறமையால் ஒரு உயரத்தை எட்டலாம், ஆனால் அந்தப் பீடத்திலிருந்து மிக எளிதாக நம்மைக் கீழே இறக்கிவிட முடியும்.

பார்வதி திருவொத்து
பார்வதி திருவொத்து

உலகெங்கும் இன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் சாமானியர்களின் சலுகைகளை எவ்வளவு எளிதாகப் பறிக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, சமீபத்திய ஆய்வுகள் உலகளவில் பெண்களின் உரிமைகள் அதிர்ச்சியூட்டும் வேகத்தில் குறைந்து வருவதைக் காட்டுகின்றன.

சமூகத்தை இயங்க வைக்கும் சாமானிய மனிதர்களின் அடையாளம் மற்றும் வலிமையைப் பற்றி ‘ஐ, நோபடி’ பேசுகிறது. ஒரு பிரமாண்ட நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அதன் வெற்றிக்குக் பின்னால் இருக்கும் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும், தொழிலாளியும் தான் காரணம். ஆனால், நாம் பெரும்பாலும் அதை மறந்துவிடுகிறோம். இந்தத் திரைப்படம் வெறும் ஒரு கொள்ளைச் சம்பவத்தைப் பற்றியது மட்டுமல்ல. அதிகார அமைப்புகளுக்கான சாட்டையடி. தங்களை ‘யாரும் இல்லாதவர்கள்’ என்று நினைப்பவர்கள், தங்களின் உண்மையான பலத்தை உணர்ந்துவிட்டால், இந்த அதிகார அமைப்பையே சவாலுக்கு இழுக்க முடியும் என்பதைப் படம் நினைவூட்டுகிறது.

இப்படத்தில் நானும் ஒரு சாமானியப் பெண்ணாகவே நடித்துள்ளேன். பிரித்விராஜ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தத் திரைப்படத்தை, பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்ரியா பிரித்விராஜ் தயாரித்துள்ளார். சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்கு அசாத்திய கண் உள்ளது. மலையாள சினிமா பொதுவாக யதார்த்தமான கதைக் களங்களுக்குப் பெயர் பெற்றது, ஆனால் இயக்குநர் நிசாம் பஷீர் இந்தத் திரைப்படத்தை மிகவும் ஸ்டைலிஷாகவும், விறுவிறுப்பான ஹெய்ஸ்ட் எனர்ஜியோடும் இயக்கியுள்ளார். அதனால்தான் அனைவரும் இதை ஒரு கொள்ளை சார்ந்த படம் என நினைக்கிறார்கள், ஆனால் தியேட்டரில் பார்க்கும்போது இதன் முழுப் பரிமாணமும் புரியும்” என்று பகிர்ந்து கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *