மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், அவரது மரணத்தைக் கிண்டல் செய்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டதாகக் கூறப்படும் பல் மருத்துவர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அகில இந்திய பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (AIDSA) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான டாக்டர் முஸ்கான் சோனி, அகில இந்திய பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளராகப் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கேத்தன் அகர்வாலின் மரணம் குறித்து இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறான மற்றும் அவமரியாதையான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தைப் பெற்றது.
அந்த வீடியோவில், “அந்த புனே பையனுக்கு முடி இல்லை… இப்படிப் பொய் சொன்னால், நீங்கள் சாகத்தான் செய்வீர்கள்… அதனால் #IHateMen” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கேத்தனுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருந்ததாலும், அவர் விக் அணிந்திருந்ததாலும், அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளி சியா கோயல் அவரைத் திருமணம் செய்ய விரும்பவில்லை என்று வெளியான செய்திகளை மையமாக வைத்தே டாக்டர் சோனி இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
ஆனால், கேத்தனின் குடும்பத்தினர் இந்தத் தகவலை மறுத்துள்ளனர்.

இந்த விவகாரம் சங்கத்தின் கவனத்திற்குச் சென்ற நிலையில், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். சங்கம் வெளியிட்ட இடைநீக்க உத்தரவில், “டாக்டர் முஸ்கான் சோனி, சங்கத்தின் அரசியலமைப்பு, நடத்தை விதிகள் மற்றும் நெறிமுறை மதிப்புகளை மீறி, மறைந்த கேத்தன் அகர்வால் குறித்து மிகவும் பொருத்தமற்ற, புண்படுத்தும் மற்றும் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்டு ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, டாக்டர் சோனி சங்கத்தின் அனைத்துப் பதவிகள், பொறுப்புகள், உறுப்பினராக இருத்தல் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ பதவிகளில் இருந்தும் உடனடியாக ஐந்து ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தடைக் காலத்தில், அவர் சங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையிலும் பங்கேற்கவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.