இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்குக் கிளம்பி வந்திருக்கிறார்.
ஆனால், இங்கு நடந்த விஷயங்கள் அவரை வேறு திசைக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றன.
சினிமா ஆசை பற்றியும், நடிகர் ஆசை எப்படி டைரக்ஷன் பக்கம் சென்றது என்பது பற்றியும் 2018-ல் விகடன் தடம் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், “சுகாதாரத் துறை வேலையை விட்டுட்டேன். சினிமா கனவு பிடிச்சு ஆட்டுது; உள்ளுணர்வு, ‘இதுதான் உன் நேரம்’னு சொல்லுது. மெட்ராஸ் கிளம்பியே ஆகணும்னு வீட்டுல அடம்பிடிக்கிறேன். ‘நல்ல வேலையை விட்டுட்டு இப்படி மெட்ராஸ் கெளம்பணும்ங்கிறானே, பொறுப்பில்லாம இருக்கிறானே’னு அப்பாவுக்கு என் மேல கோபம்.
என் நாடகங்களும் என் நடிப்பும் அப்பாவுக்குப் பிடிக்கும். ஆனா, ‘எல்லாத்துக்கும் ஒரு காலநேரம் இருக்கு, இப்பிடி அவசரப்படுறானே’னு கோபமா இருந்தார். அம்மா ரொம்ப நல்ல மனுஷி. என் மேல அவ்வளவு பாசம். என்னை சமாதானப்படுத்திக்கிட்டே இருக்கும்.
இதுக்கு மேல பொறுமையா இருக்கக் கூடாது. ஒரு நாடகத்தப் போட வேண்டியதுதான்னு முடிவு பண்ணேன். கொஞ்சம் கொஞ்சமா மனநலம் பாதிக்கப்பட்டுக்கிட்டே வர்ற மாதிரி வீட்ல நடிச்சேன்.
வீட்டுக்குள்ளிருந்து பவுடர் டப்பாவை, சீப்பைத் தூக்கித் தெருவுக்கு வீசுவேன். வீட்டுக்குள்ள கதவைப் பூட்டிக்கிட்டு ஏதாவது சினிமா வசனத்தைச் சத்தமாப் பேசுவேன்.