
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த வார இறுதியில் விலை சரிவைச் சந்தித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்வு பாதையை நோக்கி நகர்ந்துள்ளது. நேற்று கூட தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை மாற்றம் கண்டது. காலை குறைந்திருந்த விலை, மாலையில் மீண்டும் உயர்ந்ததால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது. மாலை நேரத்தில் மேலும் ரூ.1,200 அதிகரித்ததன் மூலம், ஒரே நாளில் மொத்த உயர்வு ரூ.2,400 ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,08,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலை நிலவரப்படி ரூ.1,07,200 ஆக இருந்த சவரன் விலை, மாலை நேர உயர்வுக்குப் பிறகு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தொடர்ச்சியான விலை உயர்வு காரணமாக நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கத்தின் விலை மாற்றம் அடுத்த சில நாட்களிலும் கவனத்தை ஈர்க்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.