இந்த சம்பவம் திரைப்படத்திற்காக கொஞ்சம் புனையப்பட்டதாக இருந்தாலும், நிஜத்திலும் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் அபினவ் பிந்த்ராவுக்கு அதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தது. 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் கலந்து கொண்டிருந்தார் இறுதிப்போட்டிக்கு முந்தைய தகுதிச்சுற்றில் அபினவ் மிகச்சிறப்பாக இலக்கை துளைக்கிறார். இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெறுகிறார். சிறிது நேர இடைவேளையில் இறுதிப்போட்டி.

அதற்கு முன்பாக பயிற்சி செய்ய ஒரு சில நிமிடங்கள் வழங்கப்படுகிறது. எல்லா வீரர்களை போல அபினவ்வும் பயிற்சியை தொடங்குகிறார். ஆனால், நினைத்ததைப் போல அவரால் இலக்கை துளைக்க முடியவில்லை. எதோ தவறாக இருப்பதை உணர்கிறார். துப்பாக்கியின் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கிறார். அப்போதுதான் ஒரு அதிர்ச்சி. துப்பாக்கியின் ‘Sight’ பகுதியில் ஒரு பிரச்னை. இதை தானாக தவறுதலாக விபத்தாக நடந்ததா இல்லை யாரும் வேண்டுமென்றே துப்பாக்கியை பழுதாக்கிவிட்டார்களா என எதுவும் தெரியவில்லை.
இறுதிப்போட்டிக்கான நேரம் நெருங்குகிறது. அபினவ்வின் டீம் செய்வதறியாமல் நிற்கின்றனர். அபினவ் மட்டும் பதட்டமடையவில்லை. நிதானம் இழக்காமல் பொறுமையாக உட்கார்ந்து பழுதான பகுதியை இயன்றளவுக்கு சரி செய்கிறார். அந்த துப்பாக்கியோடு போட்டியிலும் கலந்து கொள்கிறார். முடிவு ஒரு வரலாறு. ஒலிம்பிக்ஸில் தனி நபர் பிரிவுகளில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார் அபினவ். இந்தியாவின் தேசியக் கொடி மேலேற அந்த ஒலிம்பிக்ஸ் அரங்கில் தேசிய கீதம் ஒலித்தது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் அபினவ் பிந்த்ராவுக்கு 2008 ஒலிம்பிக்ஸில் நடந்த சம்பவத்தைதான் சினிமா புனைவோடு காட்சிப்படுத்தியதை போல இருக்கும்.