India
oi-Vignesh Selvaraj
போபால்: இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கவலை தெரிவித்துள்ளார். கங்கை ஆற்றில் படகு சவாரி செய்தபோது, சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக முஸ்லிம் மாணவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்துள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது, “கங்கை நதியில் படகில் வைத்து அசைவம் சாப்பிடுவது சட்டப்படி குற்றமில்லை. ஆனால் பாஜக அரசின் காவல்துறை, புனித நதியை அசுத்தம் செய்வதாக கூறி 14 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு 3 மாதம் சிறையில் கழித்தனர்.

இந்த சம்பவம் தேசத்தின் குடிமக்கள், அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கிய சட்டப்பூர்வ உரிமையின் கீழ் செயல்படும்போதும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஒரு போக்கை காட்டுகிறது.
இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவரின் பார்வையை பகிர்ந்து கொள்ளவும், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தற்கான சுதந்திரம் உள்ளது. விவாதமும், மாற்றுக்கருத்தும் தான் ஜனநாயகத்தின் சாரம். துரதிஷ்டவசமாக அது குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் குறித்துக் கவலை தெரிவிப்பவர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுகின்றனர். வளாகப் போராட்டங்களுக்காக மாணவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்படுகின்றனர், ஜாமீனும் கிடைப்பதில்லை என்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் சுட்டிக்காட்டினார்.
“நீதிமன்றங்கள் செவிசாய்த்து ஜாமீன் வழங்கினாலும், பல சமயங்களில் அது தாமதமாகவே வழங்கப்படுகிறது. ஆனால், ஜாமீன் வழங்கும்போது விதிக்கப்படும் கட்டுப்பாட்டு நிபந்தனைகளே பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இத்தகைய கட்டுப்பாட்டு உத்தரவுகள் மூலம், நீதிமன்றங்கள் குடிமக்களிடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாம் என்று மறைமுகமாகக் கூறுகின்றனவா அல்லது அவர்களை ஊக்கமிழக்கச் செய்கின்றனவா?” என்று அவர் பேசியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியில் ஒரு படகில் நடைபெற்ற இஃப்தார் விருந்தின் போது இறைச்சி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசினார்கள் என்ற குற்றச்சாட்டில் 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டித்தான் உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசியுள்ளார்.