விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நகரம் மற்றும் கிராமப் பகுதிகள் என, பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. அதற்கு நிகராக அந்தச் சிலைகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.
கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் இருக்கின்றன, கீழ்கவரப்பட்டு, மேல்கவரப்பட்டு கிராமங்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கடந்த 14-ம் தேதி இரண்டு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தங்கள் பகுதியில் பணம் வசூல் செய்து விநாயகர் சிலைகளை வைத்தனர்.
அதன்பிறகு மூன்றாவது நாளான நேற்று மாலை அந்த விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்காக, மினி வேனில் ஏற்றிக் கொண்டு ஆடல், பாடலுடன் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குச் சென்றனர். அப்போது யாருடைய விநாயகர் சிலை பெரியது என்ற விவகாரத்தில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், யார் முதலில் கரைப்பது என்று திசை திரும்பியது.

அந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கை கலப்பாக மாற, லேசான மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும், மேல்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவு என்பவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக இரண்டு கிராமத்தினரும் களத்தில் இறங்க முயற்சிக்க, கலவரத்தை நோக்கிச் சென்றது அந்த மோதல்.
உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் வீட்டுக்குச் சென்றதும் கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷின் ஆதரவாளர்களும், உறவினர்களும் மேல்கவரப்பட்டு கிராமத்திற்குச் சென்றனர்.