தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள முதலமைச்சர் விஜய், அதன் ஒரு பகுதியாக தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த 10-ஆம் தேதி முதல்முறையாக லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது, முதலமைச்சர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவுவதற்காக, அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
அதிகபட்சமாக, சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், தனது பிரிட்டன் மற்றும் ஐரோப்பா கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதுதவிர, எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி, பிரிட்டனைச் சேர்ந்த வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த தொழில் முதலீடுகள் மூலம் ஏறத்தாழ 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

