திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) அலுவலகத்தில் நடந்த சங்கடமான நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வென்ற கம்யூனிஸ்ட் கட்சி, இந்த முறை காங்கிரஸிடம் தோல்வியை தழுவியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள KPCC தலைமையகத்தில் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கேரள காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வருகை தந்திருந்தனர். வரும் நிர்வாகிகளை காங்கிரஸின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செரியன் பிலிப் வரவேற்றார்.
அப்போது பெண் சட்டமன்ற உறுப்பினர் பிந்து கிருஷ்ணா வருகை தந்தபோது, அவரை வலுக்கட்டாயமாகத் தழுவ முயன்றார். அவர் கைகளால் தடுத்தும் மீண்டும் மீண்டும் முயன்ற காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. கட்சியின் பிறத் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் பதிவான இந்தச் சம்பவம், அரசியல் களங்களில் தனிப்பட்ட எல்லைகள், பொது நாகரிகம் மற்றும் மரியாதை ஆகியவை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.