கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், சென்னை, கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 06.05.2026-ம் தேதி அதிகாலையில் அந்தப் பெண், வீட்டின் பாத்ரூமிற்கு சென்றார். அப்போது ஜன்னல் வழியே ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுப்பதை ஏதேச்சையாக பார்த்த அந்தப் பெண், சத்தம் போடாமல் அமைதியாக வெளியில் வந்தார். பின்னர் அந்தப் பெண், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரை கையும் களவுமாகப் பிடித்ததோடு செல்போனை பறிக்க முயன்றார். அதனால் அந்த நபர், இளம்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
அதனால் இளம்பெண், சத்தம் போட அருகில் குடியிருப்பவர்கள் அங்கு வந்து என்னவென்று விசாரித்தனர். உடனே வீடியோ எடுத்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் பாத்ரூம் ஜன்னலை ஆய்வு செய்தபோது அங்கு ஒரு செல்போன் இருந்தது. அதை எடுத்தவர்கள், கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து விவரத்தைக் கூறினர். இது தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டது. உடனடியாக செல்போனை ஆய்வு செய்தபோது அதில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து செல்போனில் உள்ள நம்பர் அடிப்படையில் விசாரித்தபோது வீடியோ எடுத்தது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த முல்லைநாதன் (31) எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முல்லைநாதன் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு முல்லைநாதனை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து கிண்டி போலீஸார் கூறுகையில், “கைதுசெய்யப்பட்ட முல்லைநாதன், புகாரளித்த பெண்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே நண்பர்களுடன் தங்கியிருக்கிறார். இவர் தங்கியிருந்த வீட்டின் அருகில்தான் பெண்கள் தங்கியிருந்த வீட்டின் பாத்ரூம் உள்ளது. அதனால், பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் முல்லைநாதன் வீடியோ எடுத்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று வீடியோ எடுத்தபோது அவர் சிக்கிக் கொண்டார். அவரிடமிருந்து இரண்டு செல்போன்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அந்த செல்போன்களை பைசர் க்ரைம் போலீஸாரிடம் ஆய்வுக்காக ஒப்படைத்திருக்கிறோம்” என்றனர்.