`கணவரை குணப்படுத்துவார் என நினைத்தேன்' – திருநங்கை வேடத்தில் வந்து விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை

Spread the love

மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த கட்டடத்திற்கு திருநங்கை வேடத்தில் ஒருவர் வந்தார். அந்த நபர் விடுதியின் வெளியில் நின்று கொண்டிருந்த பாதுகாவலரிடம் பேச்சுக்கொடுத்து அவரது நம்பிக்கையை பெற்று அந்த கட்டிடத்திற்குள் சென்றார். அந்த திருநங்கை விடுதியில் இருந்த ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி யாசகம் கேட்டார். அப்போது விமானப் பணிப்பெண் இருந்த அறை கதவை திருநங்கை தட்டினார்.

விமானப்பணிப்பெண் கதவை திறந்தார். அவரிடம் திருநங்கை பேச்சுக்கொடுத்தார். இதில் விமானப் பணிப்பெண்ணின் கணவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பது தெரிய வந்தது. உடனே அப்பெண்ணிடம் உனது கணவருக்கு கெட்ட ஆவி பிடித்திருக்கிறது. அதனை தன்னால் விரட்ட முடியும் என்று தெரிவித்தார்.

இதனை விமானப் பணிப்பெண் நம்பினார். உடனே அந்த திருநங்கையை தனது வீட்டிற்குள் விமான பணிப்பெண் அனுமதித்தார். அப்போது உள்ளே நுழைந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவரிடம் ரூ.200 வாங்கிக்கொண்டு திருநங்கை வெளியில் தப்பிச்சென்றுவிட்டார்.

திருநங்கை என்ற பெயரில் விமானப்பணிப்பெண் வீட்டிற்குள் வந்தது ஒரு ஆடவர் என்று பின்னர் தெரிய வந்தது. இது குறித்து விமானப்பணிப்பெண் போலீஸில் புகார் செய்தார். அவர் கொடுத்துள்ள புகாரில், ஆஸ்பத்திரியில் இருக்கும் என் கணவரை குணப்படுத்திவிடுவார் என்று நினைத்து திருநங்கையை எனது பிளாட்டுக்குள் நுழைய அனுமதித்தேன். அந்த நபர் என் மீது தண்ணீர் தெளித்து தலையில் கை வைத்து ஹிப்னாடிஸ் செய்து என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

100 கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிப்பு

போலீஸார் உடனே வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பெண் வசித்த கட்டடத்திற்கு வெளியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது திருநங்கை வேடத்தில் ஒருவர் ஆட்டோ ஒன்றில் ஏறிச்செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ சென்ற இடத்தை ஆய்வு செய்து குற்றவாளியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் அனில் ஷிண்டே என்று தெரிய வந்தது.

அவர் மும்பை அருகில் உள்ள கல்வா குடிசைப்பகுதியில் தங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்ட அனில் ஷிண்டேயை கைது செய்ய பவாயில் சம்பவம் நடந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்து கல்வா வரை 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் அவரது நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட்ட நான்கு மணி நேரத்தில் ஷிண்டே கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. அனில் ஷிண்டே மீது பில்லிசூனியம் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் விசாரித்தபோது தனது குடும்பம் திருநங்கை வேடத்தில் யாசகம் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *