கண்ணை மூடி திறப்பதற்குள் பேரழிவு.. 30 நிமிடத்தில் 9 மீட்டர் உயர்ந்த ஆறு! நேபாள வெள்ளம்.. பின்னணி! | Nepal Flood reason: What Caused the Sudden Flash Flood? Scientists Suspect Glacier Collapse

Spread the love

International

oi-Vigneshkumar

காத்மாண்டு: நேபாள நாட்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்றைய தினம் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கண்ணை மூடி திறப்பதற்குள் பல்வேறு பகுதிகள் அடித்து செல்லப்பட்டன. இந்த நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம்.. என்ன நடந்தது… இவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவம் மீண்டும் நடக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் நேற்று ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்துக்கு இமயமலையின் உயரமான பகுதியில் ஏற்பட்டிருக்கக்கூடிய பனி பாறை உடைப்பு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளம் போட்டே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, வீடுகள், வாகனங்கள், பாலங்கள் ஆகியவற்றை அடித்து சென்றது.

Nepal nepal flood Nepal flood reason

9 மீட்டர்

இந்த பேரழிவில் குறைந்தது 157 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 750க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களில் குறைந்தது 133 இந்தியர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை கண்டறிந்து பத்திரமாக மீட்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. வெள்ளத்தின் தீவிரம் எந்தளவுக்கு இருந்தது என்றால் அங்குள்ள திரிசூலி ஆற்றின் நீர்மட்டம் வெறும் 30 நிமிடங்களில் 9 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. மாலேகுவில் அதே 30 நிமிடங்களில் சுமார் 7 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் வித்தியாசமானது

நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவே செய்யும். ஆனால், மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் ஆற்றின் நீர் அளவு மெல்ல உயரும். இது பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்டதால் கண்ணை மூடி திறக்கும் நேரத்தில் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் தான் குறுகிய நேரத்தில் மிக பெரிய அளவு நீர் ஆற்றில் கலந்துள்ளது.

இப்போது நேபாளம் மற்றும் சீனாவில் உள்ள ஆய்வாளர்கள் வெள்ளத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிடைத்த வீடியோ காட்சிகளை வைத்து பார்க்கும்போது, பனி பாறைகள் அடங்கிய மிக பெரிய பகுதி போட்டே கோசி ஆற்றின் துணை நதியான லெண்டே கோலாவில் விழுந்திருக்கலாம் என தகவல்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாகவே அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மிக மோசமான பாதிப்பு

உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் போட்டே கோசி ஆற்று பகுதியில் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வெள்ளம் ஆற்றின் கரைகளை உடைத்து, திரிசூலி ஆற்றை நோக்கி பாய்ந்ததால் நுவாகோட் மற்றும் தாதிங் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. பனிப்பாறை உடைந்ததே காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதினாலும் மற்றொரு விஷயம் குறித்தும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

அதாவது பாறைகள் ஆற்றின் குறுகிய பகுதியில் விழுந்து தற்காலிகமாக ஆற்றின் பாதையை அடைத்திருக்கலாம். இதனால் இயற்கையான தடுப்பணை போன்ற ஒரு அமைப்பு உருவாகியிருக்கலாம். இதனால் அங்கு தண்ணீர் அதிகப்படியாக தேங்கியிருக்கும். எதிர்பாராத நேரத்தில் அந்த தடுப்பு திடீரென உடைந்து மிக பெரிய அளவிலான தண்ணீரை ரிலீஸ் செய்திருக்கலாம். இதுவே வெள்ளத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஆய்வுகள் தீவிரம்

இந்த சம்பவத்தில் நில அதிர்வு காரணமா என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள ஜிலாங்கில் இருக்கும் நில அதிர்வு கண்காணிப்பு கருவி, வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் வழக்கத்திற்கு மாறான சில சிக்னல்களை பதிவு செய்துள்ளது. ஜாங்முவில் உள்ள மற்றொரு நிலையத்திலும் இதுபோன்ற அசாதாரண செயல்பாடு பதிவாகியுள்ளது. அதாவது நில அதிர்வால் பனிப்பாறைகள் சரிந்ததா என்ற கோணத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *