திருச்சி, கிராப்பட்டி, பாரதி நகர் கிரீன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது: 31). இவர், ஒரு தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை வைத்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர் இவரைத் தொடர்பு கொண்டு, “வங்கி அதிகாரி பேசுகிறேன். உங்களுடைய கிரெடிட் கார்டைப் புதுப்பிக்க இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர் அனுப்பிய ஆப்பை ஓப்பன் செய்து அதில் கிரெடிட் கார்டு விவரங்களை அப்துல் ரஹீம் அளித்தார். பின்னர், சில நிமிடங்கள் கழித்து அவருடைய வங்கிக் கணக்கை சோதனை செய்தபோது, அதில் அவர் வைத்திருந்த ரூ. 1,02,000 பணத்தை அந்த மர்ம ஆசாமி ஆன்லைன் மூலமாகத் திருடியது தெரிய வந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த அப்துல் ரஹீம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து இது பற்றி மாநகர சைபர் கிரைம் போலிஸில் புகார் செய்தார். அதன் பெயரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் கிரெடிட் கார்டைப் புதுப்பித்து தருவதாக மர்ம நபர் சொன்ன பொய்யை நம்பி இளைஞர் ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.