International
oi-Vigneshkumar
காபூல்: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பதற்றம், தற்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் மாற்றி மாற்றி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் பின்னணி மற்றும் தற்போதைய நிலை குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
பல மாதங்களாக நீடித்து வந்த வளைகுடா மோதல் இப்போது தான் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கூட இப்போது தான் சரிய ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்த மோதல் முடிவதற்குள்ளாகவே ஆசியாவில் இன்னொரு மோதல் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் மீது ஆப்கான் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதல்
இது தொடர்பாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தாலிபான் அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாலிபான் விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குலிஸ்தான், சாகாய் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஓராக்சாய் ஆகிய பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த இடங்களில் ஐஎஸ்ஐஎஸ்-கே (ISIS-K) பயங்கரவாத அமைப்பின் மறைவிடங்கள் செயல்பட்டு வந்தன. இந்தத் தளங்களைப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு வந்தன. இது ஒரு துல்லியமான பதிலடியாக நடத்தப்பட்டது. எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அமைதியாக இருக்க முடியாது” என்றும் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
பின்னணி
இந்த மோதல் திடீரென வெடித்தது அல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் இருப்பிடங்களைத் தான் தாக்கியதாகப் பாகிஸ்தான் கூறியது. இருப்பினும், இதை மறுத்த ஆப்கான், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியது. இதற்குப் பதிலடியாகவே, இப்போது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியுள்ளது.
காரணம் டிடிபி
பாகிஸ்தானுக்கும் தாலிபான்களுக்கும் இடையிலான மோதலுக்கு முக்கியக் காரணம் டிடிபி எனப்படும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தான். பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கலகம் செய்யும் இந்த டிடிபி அமைப்பினர், ஆப்கானிஸ்தான் மண்ணில் தஞ்சம் புகுந்து கொண்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், தாலிபான் அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதோடு, தங்கள் மண்ணை யாரும் மற்ற நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று கூறி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்தப் பதற்றத்தைத் தணிக்கப் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன. சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “தாலிபான் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன” என்று வெளிப்படையாக தெரிவித்தார். எல்லையில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க ஆப்கானிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே பாகிஸ்தான் குற்றச்சாட்டு.!
கடும் பாதிப்பு
இந்த ராணுவ மோதல்கள் எல்லையோர மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளன. மேலும், இதனால் இரு நாடுகளையும் இணைக்கும் முக்கிய வர்த்தகப் பாதைகள் மூடப்படுகின்றன. லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்படுவதால், தொழிலதிபர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ‘துரந்த் எல்லை’ பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் சூழலில், இரு நாடுகளும் பின்வாங்கத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆப்கானிஸ்தான் தனது ராணுவ வலிமையைக் காட்டத் தொடங்கியிருப்பது, பாகிஸ்தானுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே உடனடியாக அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லையென்றால் இந்த சிறு மோதல் ஒரு போராக வெடிக்க வாய்ப்பு அதிகம்!