கந்தர்வக்கோட்டை: முன்னாள் அமைச்சரை ஓரங்கட்டிய அதிமுக; தட்டி தூக்கிய தவெக! – யார் இந்த சுப்பிரமணியன்?

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் த.வெ.க சார்பில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான சுப்பிரமணியன் சுமார் 11,039 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கந்தர்வக்கோட்டையில் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (57). அ.தி.மு.கவில் அங்கம் வகித்த சுப்பிரமணியன் குளத்தூர் தொகுதியில் 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குளத்தூர் தொகுதி நீக்கப்பட்டு, கந்தர்வக்கோட்டை(தனி)தொகுதி அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக செயல்பட்ட சுப்பிரமணியனுக்கு அ.தி.மு.க சார்பில் கந்தர்வக்கோட்டையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்ற சுப்பிரமணியன் ஜெயலலிதா அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக்கப்பட்டார்.

குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெரும்பாலும் சுப்பிரமணியன் ஓரங்கட்டப்பட்டார்.

மாவட்டத்தில் அ.தி.மு.கவின் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழக்கப்படவில்லை. குறிப்பாக கிளை செயலாளார் என்ற நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் தான் 2016, 2021 தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட சீட் கேட்டு முயற்சித்தும் எந்த பலனில்லை.

இதையடுத்து, சற்றே கட்சியில் இருந்தே விலகி இருக்கும் நிலைமைக்கும் தள்ளப்பட்டிருந்தார். கந்தர்வக்கோட்டையில் போட்டியிட விருப்பமனு அளித்ததோடு, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாய்ப்பு கேட்க முயற்சி செய்திருக்கிறார்.

அந்த முயற்சியும் தோல்வியில் முடியவே கு.ப.கிருஷ்ணன் மூலம் கடந்த பிப்ரவரியில் த.வெ.கவில் ஐயக்கியமானார். தொடர்ந்து கந்தர்வக்கோட்டையில் த.வெ.க சார்பில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் வெற்றியைப் பெற்று கந்தர்வக்கோட்டையில் மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறார்.

த.வெ.க வேட்பாளராக தொகுதிக்குள் இவர் சென்ற போது, அமைச்சராக இருந்தபோதும் தொகுதிக்காக எதையும் செய்யவில்லை என்று மக்கள் மத்தியில் புகார் எழுந்தது. ஆனாலும், இவர் மீது அப்போதும் சரி இப்போதும் சரி ஊழல் குற்றச்சாட்டு இல்லாதது ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது.

இவரின் எளிமையான அடையாளமும், விஜயின் ஆதரவு அலை எல்லாம் சேர்ந்து கந்தர்வக்கோட்டையில் மகுடம் சூட வைத்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *