India
oi-Nantha Kumar R
அமராவதி: ‘ஹோம் வொர்க்’ முடிக்கவில்லை என்று 6 வயது நிரம்பிய எல்கேஜி மாணவனை ஆசிரியை ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இதில் உறைந்துபோன மாணவன் அடுத்த சில வினாடிகளிலேயே டீச்சரின் மடியிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒன் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொத்தரோடு என்ற இடத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தபள்ளியில் பிரனாய் தேஜ் என்ற 6 வயது நிரம்பிய மாணவன் எல்கேஜி படித்து வந்தான்.

இந்நிலையில் தான், இன்று மாணவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான். ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் பிரனாய் தேஜ்-ஜின் குடும்பத்தினருக்கு பள்ளி நிர்வாகத்தினர் போன் செய்து பேசினர்.
அப்போது, ”உங்களின் மகன் பள்ளியில் மயங்கி விழுந்துவிட்டான். உடனடியாக கேஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளோம்” என்றனர். பதறியடித்து சென்ற பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரனாய் தேஜ் இறந்துவிட்டான் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அவர்கள் கதறி அழுத்தனர். இதுபற்றி அறிந்தவுடன் மாணவன் பிரனாய் தேஜ்-ஜின் குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு போராட்டம் நடத்தினர். ஆசிரியை அடித்ததால் தான் பிரனாய் தேஜ் இறந்துள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்தனர்.
இதுபற்றி பிரனாய் தேஜ்ஜின் தந்தை கூறுகையில், ” காலை சுமார் 8 மணிக்கு என் மகன் தூக்கத்தில் இருந்து கண்விழித்தான். பள்ளிக்கு செல்வதாக அடம்பிடித்தான். உறுதியாக பள்ளிக்கு செல்வேன் என்று கூறினார். தேர்வுகள் விரைவில வரவிருப்பத்தால் பள்ளிக்கு அனுப்பினோம். சரி அப்பா நான் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றான். ஆனால் இனி என் மகன் வரவே மாட்டான்” என்று கண் கலங்கினார். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
ஆனால், அவர்கள் கேட்கவில்லை. சம்பவம் தொடர்பாக பிரனாய் தேஜ் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார், வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளி, ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.அப்போது பள்ளி வகுப்பறையில் மாணவன் பிரனாய் தேஜ்-ஜை ஆசிரியை கன்னத்தில் அறைவதும், அடுத்த சில நொடிகளில் பிரனாய் தேஜ் அவரது மடியிலேயே மயங்கி விழுவது தொடர்பான காட்சிகள் பதிவாகி உள்ளது.
அதோடு பிரனாய் தேஜ் ‘ஹோம் வொர்க்’ செய்யாமல் பள்ளி சென்றதால் ஆசிரியை கண்டித்து கன்னத்தில் அறைந்த நிலையில் மாணவன் மயங்கியதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ”மாணவன் இறப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் சரியான காரணம் தெரியவரும். நாங்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
இந்த சம்பவத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே தான் மாணவன் பிரனாய் தேஜ்-ஜை ஆசிரியை கன்னத்தில் அறைவதும், அடுத்த சில நொடிகளில் பிரனாய் தேஜ் அவரது மடியிலேயே மயங்கி விழுவது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்க்கும் நெட்டிசனர்கள் ஆசிரியையை திட்டி தீர்த்து வருகின்றனர்.
