Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
மயிலாடுதுறை: தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட்கள் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ள விஜய் இருக்கும் வரை அவர்தான் நிரந்தர முதல்வர் என்று கூறிய செங்கோட்டையன், இடைத்தேர்தலில் தவெக 100% வெற்றியை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தவெக தரப்பில் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்த போதும், அவர்கள் விலகியே நிற்கின்றனர்.

ஆட்சிக்கு ஆதரவு அளித்தாலும், கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மயிலாடுதுறையில் அமைச்சார் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாடு மக்கள் மாற்றத்தை விரும்பி விஜய்யை கொண்டு வந்துள்ளார்கள்.
இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும் தலைவராக விஜய் இருந்து வருகிறார். அவர் இருக்கும் வரை விஜய் தான் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றை படைக்கும் நிலையில் தான் இருக்கிறார். ஆர்.எஸ்.பாரதி சொல்வதை போல் தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை. திமுகவுக்கு தான் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் 100% வெற்றி வாய்ப்பை எட்டுவோம்.
மற்ற கட்சிகள் என்ன செய்யப் போகிறது என்பதை தேர்தல் முடிவில் நீங்கள் பார்ப்பீர்கள். அதேபோல் மின் வெட்டு இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம். விரைவில் மின் வெட்டு என்பதே இருக்காது என்றார். இதன்பின், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பாருங்கள்.
இன்னும் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று தெரிவித்தார். இதன் மூலமாக உள்ளாட்சித் தேர்தலின் போது இன்னும் சில கட்சிகள் தவெக கூட்டணியில் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பூவை ஜெகன்மூர்த்தி தவெகவுக்கு ஆதரவாக பேசி வரும் சூழலில், உள்ளாட்சி தேர்தலின் போது அவர்களும் கூட்டணியில் இணைவார்கள் என்று முனுமுனுப்புகள் அதிகரித்துள்ளன.