த.வெ.க-வைப் பொறுத்தளவில், ‘இந்தியா‘ கூட்டணியில் இடம்பெற தயங்குகிறது. பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டவும், த.வெ.க-வுக்கு தயக்கம் இருக்கிறது. த.வெ.க-வின் இந்தக் குழப்பம் கரப்பான்பூச்சி போராட்டத்தில் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.
மத்திய அரசின் சில திட்டங்களை ஏற்றுக்கொண்டது, சில சட்டங்களுக்கு எதிராக முழுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யாதது, ‘எங்களுக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை; சரியான நேரத்தில் எங்கள் கருத்தைச் சொல்வோம்’ என்ற பதில், துணைவேந்தர் தேர்வில் யு.ஜி.சி. பிரதிநிதிக்கு இடமளிப்பது போன்ற த.வெ.க-வின் நிலைப்பாடுகளை, பா.ஜ.க-வை தேவையில்லாமல் கோபப்படுத்த வேண்டாம் என்ற அரசியல் கணக்கின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
அதே நேரத்தில், மாநிலத்தின் நிலைமையும் ஆட்சியை எச்சரிக்கையாக நடத்த வைக்கிறது. காவிரி டெல்டாவில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. குடிநீருக்கே சிக்கல் உருவாகும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசுடன் நேரடி மோதலை உருவாக்க த.வெ.க விரும்பாது என்பதும் அரசியல் வட்டாரங்களின் கருத்தாக இருக்கிறது.

அதேபோல், தேசிய அரசியலிலும் முழுமையாக காங்கிரஸை விட்டு விலக முடியாத சூழல் இருக்கிறது. டெல்லியில் நடைபெறவுள்ள வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவுள்ள நிலையில், முதல்வர் விஜய்யும் கலந்துகொள்ளலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆட்சிக்குத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கும் வரை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு த.வெ.க-வுக்கு தேவை. அதே நேரத்தில், எந்தச் சூழலிலும் பா.ஜ.க-வை நேரடியாகப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் த.வெ.க-வுக்கு இருக்கிறது. இப்படியாக, த.வெ.க-வின் அரசியல் நகர்ந்துகொண்டிருக்கிறது.