
சென்னை அடையாறில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளை மேலாளரை, முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடையாறில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில் எஸ்பிஐ வங்கியின் என்ஆர்ஐ கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையின் மேலாளராக ஹர்ஷீன் சிங் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வங்கி செயல்பட்டு வரும் கட்டடத்தில் உள்ள லிப்டில் பழுது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் தெரிவிப்பதற்காக, கயல்விழியின் உதவியாளரை வங்கி மேலாளர் தொடர்புகொள்ள முயன்றதாக தெரிகிறது. ஆனால், அவர் அழைப்பை எடுக்காததால், கயல்விழியை நேரடியாகத் தொடர்புகொண்டு லிப்ட் பழுது குறித்து ஹர்ஷீன் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கயல்விழி வங்கி கிளைக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது, தனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு லிப்ட் பிரச்னை குறித்து தெரிவித்தது தொடர்பாக வங்கி மேலாளரிடம் அவர் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், வங்கி மேலாளர் தனது இரு கைகளையும் கன்னத்தில் வைத்தபடி அமர்ந்திருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி அவரது கன்னத்தில் அறைந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வங்கி மேலாளரை தாக்கியதாகக் கூறப்படும் கயல்விழி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.