அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆகியும், அவர் பொதுவெளியில் தோன்றாமலும், அவரது குரல் பதிவு வெளியாகாமலும் இருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர் கொல்லப்பட்டிருக்க 90% வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தாலும், இஸ்ரேல் அவர் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறது.

இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனியுடன் இரண்டரை மணி நேரம் சுமுகமான சூழலில் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்திருக்கிறார். ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் இந்தச் சந்திப்புக்கு அனுமதி பெற அவர் பலமுறை கோரிக்கை விடுத்து, இறுதியில் ராஜினாமா செய்வதாக எச்சரித்த பின்னரே அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக ‘Iran International’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த மே 31 அன்று, அதிபர் பெஷெஷ்கியன் உச்சத் தலைவரின் அலுவலகத்திற்குத் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். நாட்டின் நிர்வாகத்தில் புரட்சிகரக் காவல் படையினரின் (IRGC) ஆதிக்கம் எல்லை மீறிவிட்டதாகவும், அதிபர் மற்றும் அமைச்சரவை புறக்கணிக்கப்படுவதாகவும் அதில் குற்றம்சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்தே, இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அதிகாரப்பூர்வ இல்லத்திற்குப் பதிலாக டெஹ்ரானில் உள்ள ஒரு ரகசிய இடத்திற்கு அதிபரின் பாதுகாப்புக் குழுவினர் அவரை அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட ஒரு காரின் பின்னிருக்கையில் அமர வைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த மொஜ்தபா காமேனியுடன் சில நிமிடங்கள் மட்டுமே இருட்டில் பேச அனுமதி வழங்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மை மற்றும் கைகுலுக்க விதிக்கப்பட்ட தடையால், அருகில் இருந்த நபர் உண்மையிலேயே மொஜ்தபா காமேனிதானா அல்லது அவரது குரல் தானா என்ற சந்தேகம் அதிபருக்கு எழுந்ததாகக் கூறப்படுகிறது.
காமேனியின் குடும்ப உறவினரான முகமது பாகர் கர்ராசியின் கூற்றுப்படி, பெஷெஷ்கியன் இதுவரை 28 முறை ராஜினாமா செய்ய முயன்றதாகவும், அடுத்தமுறை ராஜினாமா செய்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என மொஜ்தபா எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.