வேட்டை கருப்பு அவதாரத்தில் வந்திறங்கி நடிப்பில் சூர்யா ஆடியிருப்பது பேயாட்டம்! மக்களின் துன்பங்களைக் கண்டு துடிப்பவராக எமோஷனல் எல்லையிலும், அவர்களுக்காக நீதி பெற்றுத்தர ஆக்ஷன் எல்லையிலும் சூர்யா தந்திருப்பது நச் தரிசனம்! வில்லனாக ஆர்.ஜே. பாலாஜி, காமெடிகளைக் கொஞ்சம் மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு நடிப்பில் தேவையான மீட்டரைக் குறைவின்றித் தந்திருக்கிறார். கருப்பனின் ஆட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் த்ரிஷா, கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆனால், லிப் சின்க்கில் தடுமாறியிருப்பது துருத்திக்கொண்டு தெரிகிறது.

ஏமாற்றுபவர்கள் குணம் அறியாமல் அனைத்தையும் அப்பாவித்தனத்துடன் கையாள்பவராக தன் அனுபவத்தைக் காட்டியிருக்கிறார் இந்திரன்ஸ். படத்தின் எமோஷனல் கட்டடத்திற்குத் தூணாகவும் இருந்திருக்கிறது இந்திரன்ஸின் நடிப்பு. இதற்கு அனகா ரவியும் உதவியாக இருந்து, கதாபாத்திரம் கோரும் அழுத்தத்தைத் தாராளமாகத் தந்திருக்கிறார். ஊழல் கரை படிந்த கோட் அணிந்து வரும் நீதிபதியாக நடிகர் நட்டி சுப்பிரமணியம் நம் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார். இவர்களைத் தாண்டி ஸ்வாசிகா, ஷிவதா, நமோ நாராயணா, மன்சூர் அலி கான், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், தீபா ஷங்கர், லொள்ளு சபா மாறன் ஆகியோர் அவரவர் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.