உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், பெங்களூரில் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டி நோக்கி காரில் குடும்பத்துடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, கரூர் மாவட்டம், ஈசநத்தம் அருகே உள்ள திண்டுக்கல் நெடுஞ்சாலையில், சாலையைக் கடப்பதற்காக பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடந்துள்ளது.
ஈசநத்தம் பிரிவு சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, காரை ஓட்டி வந்த ஓட்டுநர் இடதுபுறமாக காரைத் திருப்பியுள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த அசோக் லேலண்ட் லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் காரின் முன்பகுதி லாரியின் அடியில் சிக்கிச் சிதைந்தது. இதில், காரில் பயணித்த அரவிந்த் (வயது: 30), அவரது 8 மாத கர்ப்பிணி மனைவி ஜனனி (வயது: 27) மற்றும் காரின் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரில் இருந்த 3 வயது பெண் குழந்தை துவிதா மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டித்துரை ஆகிய இருவர் விபத்திலிருந்து மீட்கப்பட்டு, அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.