"கர்நாடகம் சென்று காவிரியைக் கையோடு எடுத்து வந்துவிடலாம் என நினைத்தாரோ?" – விஜய்யைச் சாடும் ஸ்டாலின்

Spread the love

மேகதாது விவகாரம் தமிழ்நாடு – கர்நாடகா என இரு மாநிலங்களுக்கிடையேயும் தீவிரமாகி வருகிறது. காவிரி டெல்டா பகுதி நீர் வரத்தின்றி வரண்டுவருகிறது. விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா இதுவரை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. இதற்கிடையில், கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமாரைச் சந்திக்க தமிழ்நாடு முதல்வர் விஜய் ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், கர்நாடகாவில் தற்போது சூழல் சரியில்லை. எனவே, தமிழ்நாடு முதல்வர் இப்போது வரவேண்டாம் என வெளிப்படையாகச் சொல்லிவிட்டார் டி.கே.சிவக்குமார்.

இதற்கிடையில், தவெக அமைச்சர் நிர்மல் குமார், காவிரி தண்ணீருக்காக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம்.

கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்த காலத்தில் நாம் பெற்ற படிப்பினை.

உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ… நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும், “நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்” என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்னையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும். நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். முதல்வர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *