
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வரும் நிலையில் இன்று மின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய செந்தில் பாலாஜி தற்போது மின்வாரியத்தில் அளவுக்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஊழியர்கள் மனவேதனை அடைகின்றனர் என்று இதனை அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதேபோல கோடைக்காலம் மற்றும் அதைத் தொடர்ந்த வரும் மழைக்காலம் ஆகிய இரு காலங்களிலும் மின்வெட்டு இல்லாத சீரான மின் விநியோகத்தை வழங்க வேண்டும் என்றால் அதற்குரிய பொருட்கள் மற்றும் மின் வாரிய சாமான்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளும் ஊழியர்களும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மின்சார வாரியத்தின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் 18 ஹார்டு டிஸ்க்குகள் காணமால் போய்விட்டதாகவும் அதில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் அவர் சொன்னது 18 ஹார்டு டிஸ்க்குகள் ஆனால் கிடைக்கப்பெற்ற ஹார்டு டிஸ்க்குகள் 38 என்று கூறியது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிர்மல்குமார் முதலில் கரூர் கம்பெனி என்று குறிப்பிட்டு செந்தில் பாலாஜியை அழைத்ததால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட உடனே நிர்மல் குமார் நான் வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இதற்கு தக்க பதலடி கொடுக்கும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் உடனே எழுந்து நிர்மல் குமாரை சங்கி அமைச்சர் மன்னிக்கவும் அவர் பேசியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பேசினார். இது தவெகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருவருக்கும் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதற்கு உடனே உதயநிதிக்கு தக்க பதிலடியாக அமைச்சர் நிர்மல்குமார் 10 நிமிடம் பாத்ரூமில் இருந்தவர் தானே என்றும், எங்களுக்கும் பேச தெரியும் என்று இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சற்று நேரத்தில் சட்டசபையில் பரபரப்பு சூழல் நிலவியது.
அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 3,70,000 மின் இணைப்புகளுக்கு மீண்டும் மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் கூடுதல் கட்டணம் குறித்தான புகார்கள் வரும் நிலையில் மின்சாரம் வாரியமே முன்வந்து கடந்த ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் வெறும் 2,791 இணைப்புகளில் மட்டுமே சிறிய அளவிலான குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டன.
முந்தைய ஆட்சி காலத்தில் டேபிள் ரீடிங் முறை பின்பற்றியதால் நேரடியாக சென்று அளவிடாமல் அமர்ந்த இடத்திலேயே ரீடிங்கை பதிவிடும் பழக்கம் இருந்ததன் மூலம் தான் அதனை மொத்தமாகக் கணக்கீடு செய்யும் போது கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறினார். மேலும் இந்த முறையிலிருந்து மாற்றி தற்போது ப்ளூடூத் மூலம் செல்போன் வழியே துல்லியமாக ரீடிங் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் திமுக ஆட்சி காலத்தில் மின்சாரத் துறைக்கென்றே 4 முறை அமைச்சர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர் என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு கால ஆட்சியில் மட்டும் 99,000 டிரான்ஸ்ஃபார்மர்கள் வாங்கப்பட்டன. ஆனால் தற்போது உள்ள சூழலில் இது போதுமானதாக இல்லாததால் மாநிலம் முழுவதும் 593 புதிய துணை மின் நிலையங்கள் உடனடியாக அமைக்கப்படுவதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே 200 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் சூழலில், வரும் ஆண்டுகளில் மீதமுள்ள 263 துணை மின் நிலையங்கள் சீரான முறையில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.