
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும், பல தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் இதயநோய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்ட நடிகை சௌகார் ஜானகி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாடக மேடையில் தொடங்கிய கலைப்பயணம்:
1931-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பிறந்த சௌகார் ஜானகி, இளம் வயதிலேயே கலைத்துறையில் ஆர்வம்கொண்டிருந்ததால் திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே அவர், 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
1950-ம் ஆண்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில் வெளியான தெலுங்குத் திரைப்படமான “சௌகாரு” மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அந்தப் படத்தின் பெயரே பின்னர் அவரது பெயருடன் இணைந்து “சௌகார் ஜானகி” என்ற அடையாளமாக மாறியது.
400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பெரும்நடிகை:
தமிழில் 1952-ம் ஆண்டு வெளியான வளையாபதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கதாநாயகி, குணச்சித்திரம், நகைச்சுவை, தாயார் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நீண்ட திரைப்பயணத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களையும், இடத்தையும் பிடித்தார்.
‘புதிய பறவை’, ‘பாமா விஜயம்’, ‘எதிர்நீச்சல்’, ‘பார் மகளே பார்’, ‘ஒளிவிளக்கு’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன. காலத்திற்கேற்ப கதாநாயகி வேடங்களில் இருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறியபோதும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனது தனித்துவமான நடிப்பால் உயிர் கொடுத்தார்.
நான்கு முதலமைச்சர்களுடன் திரைப்பயணம்:
சௌகார் ஜானகியின் திரைப்பயணத்தில் மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாக, பின்னாளில் முதலமைச்சர்களாக பதவி வகித்த ‘என்.டி. ராமராவ்’, ‘எம்.ஜி.ஆர்.’, ‘கருணாநிதி’, ‘ஜெயலலிதா’ உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளுடன் கலைப்பயணத்தில் இணைந்து பணியாற்றியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
விருதுகளால் கௌரவிக்கப்பட்ட கலைச்சேவை:
திரையுலகில் பல ஆண்டுகள் ஆற்றிய பங்களிப்புக்காக சௌகார் ஜானகிக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. “நந்தி விருதுகள்”, “கலைமாமணி விருது” உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களை அவர் பெற்றுள்ளார்.
அவரது நீண்டகால கலைச்சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 2022-ம் ஆண்டு “பத்மஸ்ரீ விருது” வழங்கி கௌரவித்தது. பல தசாப்தங்களை கடந்து தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் தனது முத்திரையை பதித்துள்ள சௌகார் ஜானகி, மூத்த தலைமுறை நடிகைகளில் மிக முக்கியமானவராக திகழ்ந்தார்.
சௌகார் ஜானகி கடைசியாக தமிழில் சந்தானம் நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியான “பிஸ்கோத்” என்ற படத்தில் நடித்தார். அவர் திரைவாழ்வில் கடைசியாக “அண்ணி மஞ்சி சகுணமுலே” தெலுங்கில் வெளியான படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவில் தொடங்கிய அவரது திரைப்பயணம் தெலுங்கு சினிமாவிலேயே முடிவுற்றார் என தெலுங்கு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வருடத்தில் இந்திய திரையுலகம் இழந்த பல சிகரங்களில் சௌகார் ஜானகியின் மறைவும் திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.