மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 24) ஒரே மேடையில் 42 பேருக்கு திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த திருமண விழாவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் மணமகன்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் இடைத்தரகர்கள் ‘கூட்டுத் திருமண விழா’ ஏற்பாட்டிற்காக ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை வசூலித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, மணமகன்களின் மொபைல் போன்களுக்குப் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அவர்கள் அனைவரும் ஏழை அல்லது ஆதரவற்ற பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்றும், உடனடியாகத் திருமணம் செய்யச் சம்மதிப்பதாகவும் இடைத்தரகர்கள் நம்ப வைத்துள்ளனர்.

இதை நம்பி பணம் கட்டிய தேவாஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் இருந்து தங்களுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் ஆண்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இந்தத் திருமண விழாவிற்காகப் பல குடும்பங்கள் கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டும், ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தும் வந்திருந்தனர். ஆனால், மாலை நேரமாகியும் மணமகள்கள் யாரும் திருமண விழா மேடைக்கு வரவில்லை. அதனால், திருமண மைதானமே கோபமும் அதிர்ச்சியும் நிறைந்த போர்க்களமாக மாறியது.