Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவைத் தங்கள் அணிக்குக் கொண்டு வர கொல்கத்தா அணி நிர்வாகம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக கேகேஆர் அணியின் நிர்வாகம், மும்பை இந்தியன்ஸ் அணியின் மேனேஜ்மென்ட்டை அணுகி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியதில் இருந்தே அங்கு பல சர்ச்சைகளும் சலசலப்புகளும் நீடித்து வருகின்றன. கடந்த சீசன்களில் அவரது தலைமையின் கீழ் மும்பை அணி எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை. மேலும், அவரது கேப்டன்சி மற்றும் ஃபார்ம் குறித்து விமர்சனங்களை முன்வைத்து, அவரை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று பலரும் பேசுகின்றனர்.

இந்த சூழலில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல புதிய கேப்டனைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. கொல்கத்தா அணியில் அஜிங்கியா ரஹானே ஒரு தற்காலிக கேப்டனாகவே செயல்பட்டு வந்த நிலையில், அடுத்த சீசனில் ஒரு வலுவான ஆல்-ரவுண்டர் மற்றும் கேப்டனைத் தேடி வருகிறது கேகேஆர் நிர்வாகம்.
ஹர்திக் பாண்டியா தங்களது அணிக்கு வந்தால் அவருக்கு நேரடியாகக் கேப்டன் பொறுப்பை வழங்க கேகேஆர் தயாராக உள்ளதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கேகேஆர் நிர்வாகம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்கள் இடையே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.
இந்த டீல் ஆல் கேஷ் டீலாக இருக்குமா அல்லது வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரேடிங் முறையில் அமையுமா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கேகேஆர் மட்டுமின்றி, ராஜஸ்தான் அணியும் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. ராஜஸ்தான் அணி தங்களது அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மும்பை அணிக்குக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக பாண்டியாவை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும், ராஜஸ்தான் அணியில் ரியான் பராக் நீண்ட கால கேப்டனாகப் பார்க்கப்படுவதால், அங்கு பாண்டியாவுக்குக் கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்புகள் குறைவு. இதனால் கேப்டன் பதவியை முதன்மையாக எதிர்பார்க்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு கேகேஆர் அணியே தற்போதைய சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.