டேஜாவூ நாட்கள்
இணைய வழியில் உருவான ஒற்றுமை, நீட் முறைகேடுகள் என்ற பிரச்சனையில் ஒரு போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. வகுப்பறைகளில் பாடப்புத்தகங்களுடன் போராடியவர்கள், போராட்டக் களத்தைப் பாடப்புத்தகமாக மாற்றிப் படிப்பதுடன், அவர்களே எழுதவும் தொடங்கிவிட்டார்கள்.
இந்திய ஜனநாயகத்தைச் சீரழிக்கும் அத்தனை போக்குகளின் மீதும் இளம் தலைமுறை தனது தீவிரமான எதிர்ப்பைப் பேசிக் கற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு இந்த அனுபவம் ஏற்கனவே உண்டு. ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது, அது காளை மாடுகளைப் பற்றியதாகப் பலரும் ஊடகங்களில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், போராட்டக் களத்தில் அமர்ந்திருந்த நாங்கள், மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள், காவிரி உரிமை, தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டுச் சுதந்திரம், ஒற்றை இந்தியாவைத் திணிக்கும் முயற்சிகளுக்கு எதிரான ஜனநாயக உரையாடல்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.
கடைசியில் அந்தப் போராட்டம் வெற்றியில் முடிந்தாலும், பெரும்போலீஸ் வன்முறையை அந்த இளைஞர்களுக்குப் பரிசாகக் கொடுத்தது அரசும், அதிகாரமும்.
இதை தில்லியின் போலீசாருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? விவசாயிகள் போராட்டத்தில் அவர்கள் சாலைகளில் தடுப்பு அமைத்தார்கள். சாமானியர்கள் டிராக்டர்களில் அமர்ந்தபடி அந்தத் தடுப்புகளை முறியடித்தார்கள். இந்த முறையும் கொடும் வன்முறைத் தாண்டவம் ஏவப்பட்டது. ஆனால், இளைஞர்கள் தங்கள் செல்போன்களின் மூலம், அதிகாரத்தின் உண்மையான மொழியை உலகத்திற்கு அம்பலப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
இப்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் இந்தப் போராட்டம் விரிவடைகிறது. அங்கெல்லாம் போலீசும், துணை ராணுவமும் குவிக்கப்படுகிறார்கள். இளம் கன்றுகளின் கண்களில் பயம் ஒரு துளியும் இல்லை. உதடுகளில் புன்னகை தெறிக்கிறது. போலீசாரின் வன்முறைக்கு எதிராக எள்ளல் ததும்பும் நகைச்சுவைகள் வீசப்படுகின்றன. இந்தியாவின் இளம் தலைமுறை தனது ஜனநாயகத்தை ‘அப்டேட் செய்ய’ தயாராகிக் கொண்டிருப்பது தெரிகிறது.

இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரத்தில், கல்வியியல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்துத் தரப்பாரின் வேண்டுகோளை ஏற்று முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். மாணவர் இயக்கப் பெண் தலைவர்கள் நேகா போராவும், அய்ஷி கோஷும் உண்ணாவிரதக் களத்தில் உறுதி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர்களோடு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஒன்றிய அரசு இறங்கி வந்திருக்கிறது.
இனி வரும் நாட்களில் கரப்பான் பூச்சிகள் ஒரு கட்சியாக வலிமையடையலாம். கல்விக்கான போராட்டம், வேலைக்காகவும், ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகவும் விரிவடையலாம். பொய்களை விற்கும் பெரும் ஊடகங்களுக்கு எதிராகவும், மலிந்து போய்விட்ட பெருநிறுவன ஊழல்களுக்கு எதிராகவும் கோபம் கனன்றுகொண்டுதான் இருக்கிறது.
பாசிசத் தன்மைகொண்ட பிரிவினை முழக்கங்கள் சாமானியர்களை அச்சுறுத்துகின்றன. பருவமழை பொய்த்துப் போவதும், காற்றும் சூழலும் நஞ்சாவதும் அடுத்த தலைமுறையின் பூமியையே அழித்தொழிக்கும் அபாயத்தை நிகழ்த்திக் கொண்டுள்ளன.