Tamilnadu
oi-Vishnupriya R
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர் பணிக்குக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உடற்தகுதித் தேர்வில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையில் அதிரடி மாற்றம் செய்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 1,850 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.
இதற்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த நவம்பர் 16-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
தற்போது இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மாற்றப்பட்ட விதிமுறை: வெறும் கால் இனி தேவையில்லை!
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் மிக முக்கியமான சவாலாகக் கருதப்படுவது ‘மின்கம்பம் ஏறி இறங்கும்’ தேர்வாகும்.
இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, தேர்வர்கள் வெறும் கால்களுடன் தான் மின்கம்பத்தில் ஏறி இறங்க வேண்டும். இது பலருக்குக் கடினமான சவாலாகவும், காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கருதப்பட்டது.
இந்நிலையில், தேர்வர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த விதியில் மின்சார வாரியம் திருத்தம் செய்துள்ளது. இனி வரும் உடற்தகுதித் தேர்வில், தேர்வர்கள் ஷூ (Shoes) அணிந்து மின்கம்பம் ஏற அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இலக்கு: 8 நிமிடங்களில் 30 அடி!
திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி தேர்வர்கள் ஷூ அணிந்து கொண்டு 30 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் ஏற வேண்டும். இந்த இலக்கைச் சரியாக 8 நிமிடங்களுக்குள் ஏறி முடித்துத் திரும்ப வேண்டும்.
தேர்வர்களுக்கு நிம்மதி
மின்சார வாரியத்தின் இந்த அதிரடி மாற்றத்தால், உடற்தகுதித் தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷூ அணிந்து ஏறுவது பிடிமானத்தை (Grip) அதிகரிப்பதோடு, கால்களுக்குப் பாதுகாப்பையும் வழங்கும் என்பதால், தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன், இந்த உடற்தகுதித் தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.