F எழுத்தால் விபரீதம்! மருந்துக்கு பதிலாக உடலில் இறங்கிய விஷம்! துடிதுடித்து உயிரிழந்த 3 வயது சிறுவன் | Bhopal AIIMS Medical Negligence: 3-Year-Old Cancer Patient Dies After Being Injected with Formalin

Spread the love

India

oi-Vigneshkumar

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், ரத்தப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவன், செவிலியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருந்துக்கு பதிலாக உடலில் செலுத்தப்பட்ட ஒரு நச்சு திரவம் அந்தச் சிறுவனின் உயிரைப் பறித்துள்ளது.

நமது நாட்டில் பல மருத்துவர்கள் 24 மணி நேரமும் பொதுமக்களை காக்க வேலை செய்கிறார்கள். இருப்பினும், சில நேரங்களில் அவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் குறித்த தகவல்கள் தான் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் நடந்த இந்த சம்பவத்தின் விசாரணை அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது.

Bhopal AIIMS Medical Negligence

என்ன நடந்தது

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சர்தக் யாதவ் என்ற 3 வயது சிறுவன், லுகேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். கடந்த 2025 டிசம்பர் 15ம் தேதி போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டான். டிசம்பர் 17ம் தேதி காலை, சிறுவனுக்கு மருந்து செலுத்தும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த மதுபாலா சர்மா என்ற செவிலியர், அந்த அடைப்பைச் சரிசெய்ய ஒரு ஊசியைச் செலுத்தினார். அந்த ஊசியில் F என்ற எழுத்து எழுதப்பட்டிருந்தது.

சிறுவனின் தந்தை, அந்த ஊசியில் இருப்பது வழக்கமான மருந்து இல்லை என்று சந்தேகித்து செவிலியரிடம் எச்சரித்துள்ளார். ஆனால், செவிலியர் மதுபாலா சர்மா அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. மாறாக, சிறுவனின் தந்தையை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார். ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே சிறுவனின் நிலைமை மோசமடைந்தது. அவன் மயக்கமடைந்தான். உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டான். மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும், காலை 8.45 மணியளவில் சிறுவன் சர்தக் உயிரிழந்தான்.

விசாரணை

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் நடத்திய விசாரணையில், சிறுவனுக்கு செலுத்தப்பட்ட ஊசியில் இருந்தது ஃபார்மலின் என்ற நச்சு திரவம் என்பது உறுதியானது. ஃபார்மலின் என்பது இது ஃபார்மால்டிஹைட் வாயுவின் நீர்ம வடிவம். இது மனித உடலுக்குள் செலுத்தப்படும் மருந்து அல்ல. அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்படும் உடல் திசுக்கள் அழுகிப்போகாமல் இருக்கவும், உடற்கூறியல் ஆய்வகங்களில் உறுப்புகளைப் பாதுகாக்கவும் மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இது நேரடியாக ரத்த நாளங்களில் செலுத்தப்பட்டால், அது நிச்சயம் மரணத்தை விளைவிக்கும்.

யார் மீது தவறு

மருத்துவமனை நடத்திய விசாரணையில் இரண்டு முக்கிய தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. முதலில் அனுகா குஜராத்தி என்ற மற்றொரு செவிலியர், ஆய்வகப் பயன்பாட்டிற்காக ஃபார்மலினை ஒரு ஊசியில் நிரப்பியுள்ளார். அதை விதிமுறைப்படி பாதுகாப்பான இடத்தில் வைக்காமல், நோயாளி படுத்திருந்த படுக்கைக்கு அருகிலேயே விட்டுச் சென்றுள்ளார்.

அதேபோல செவிலியர் மதுபாலா சர்மா, அந்த ஊசியில் என்ன இருக்கிறது என்பதைச் சரிபார்க்காமல், அதில் “F” என்று எழுதப்பட்டிருந்ததை மட்டும் பார்த்துவிட்டு, சிறுவனின் உடலில் செலுத்தியுள்ளார். இந்த இரண்டு செவிலியர்களின் அலட்சியமே சிறுவனின் மரணத்திற்கு நேரடி காரணம் என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.

வழக்குப்பதிவு

சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்தே இப்போது மருத்துவமனையின் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் தான் கடந்த ஜூன் 11ம் தேதி போபால் போலீசார் இரண்டு செவிலியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுபாலா சர்மா மீது அலட்சியமாகச் செயல்பட்டு மரணத்தை விளைவித்ததற்காக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 106(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுகா குஜராத்தி மீது அபாயகரமான கெமிக்கலை பாதுகாப்பற்ற முறையில் கையாண்டதற்காக பிரிவு 286-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த இரண்டு செவிலியர்களும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கேள்வி

நாட்டின் மிக உயரிய மருத்துவ நிறுவனமான எய்ம்ஸ் போன்ற ஒரு இடத்தில், இவ்வளவு பெரிய பாதுகாப்பு குறைபாடு நடந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு நச்சு திரவம் நோயாளியின் படுக்கை அருகே வந்தது எப்படி? மருந்து செலுத்தும் முன் அதைச் சரிபார்க்கும் அடிப்படை விதிமுறை ஏன் பின்பற்றப்படவில்லை? போன்ற கேள்விகள் மருத்துவத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *