India
oi-Vishnupriya R
அமராவதி: நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு கால் முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நடிகர் ராம்சரணுக்கும் மணிகட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் 111 ஆவது திரைப்படத்தில் நடித்து வந்தார். இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த படத்தை ரித்தி சினிமாஸ் தயாரித்து வருகிறது.

இதில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத்குமார், சுவாசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் ஷூட்டிங், காக்கிநாடா துறைமுகப் பகுதிகளில் நடந்து வருகிறது. அந்த படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்று துறைமுகப் பகுதியில் படமாக்கப்பட்டு வந்தது.
இந்த காட்சியில் பாலகிருஷ்ணா டூப் பயன்படுத்தாமல் அவரே நடித்திருந்கார். எப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக காக்கிநாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலகிருஷ்ணா அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு இடது முழங்காலில் தசை கிழிவு ஏற்பட்டிருந்தது.
இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேரம் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்தது. தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள பாலகிருஷ்ணா முழுமையாக குணமடைந்த பிறகுதான் அவர் 111 ஆவது படத்தில் நடிப்பார் என தெரிகிறது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலகிருஷ்ணாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அது போல் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தோள்பட்டையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது போல் அவருக்கு இன்னும் 2 மாதங்கள் கழித்து இன்னொரு தோள்பட்டையிலும் அறுவை சிகிச்சை செய்யப்படும். அவர் மும்பையில் அம்பானி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து அவரையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அது போல் நடிகர் ராம்சரணுக்கும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக நடிகர் சிரஞ்சீவி வந்திருக்கிறார். பெத்தி படத்தில் சண்டைக்காட்சியில் நடித்த போது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.