கருவறைக்கு எதிரே 5 படிகளுடன்கூடிய தனிச் சந்நிதியில் ஶ்ரீகருடாழ்வார் கண்ணனைக் கும்பிட்ட நிலையில் காட்சி தருகிறார். கோயில் திருச்சுற்றில் ஶ்ரீசந்தான லட்சுமி தாயார், ஶ்ரீநிவாசப் பெருமாள், ஶ்ரீவரதராஜப் பெருமாள், ஶ்ரீவிக்ஷ்வக்சேனர், ஶ்ரீராமாநுஜர் சந்நிதிகள் அழகிய கற்றளிகளாக உள்ளன.
அழகிய விமானத்தோடு காணப்படும் இந்தக் கோயிலின் சுற்றில் நந்தவனமும் இரு உடைபட்ட சிலைகளும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
இங்கு வந்து திரட்டுப்பால் வைத்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர், இந்தக் கோயிலுக்கு வந்து சந்தான மகாலட்சுமியையும், சந்தான கிருஷ்ணரையும் வழிபட, விரைவில் புத்திரப் பாக்கியம் கிட்டும்; பால் பாயசம் படைத்து வழிபட்டால் கல்வியில் மேன்மை உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.

காலை 7 முதல் 10.30 மணி வரையும்; மாலை 5 முதல் 6.30 மணி வரையும் பிரேமிக விட்டலன் ஆலயம் திறந்திருக்கும். ஏகாதசி நாளில் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். இங்கு கண்ணன் சிவ-விஷ்ணு அம்சத்துடன் அருள்வதாக ஐதிகம்.
ஆகவே, சிவராத்திரியும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட வைபவங்களும் இந்த ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
பெரிதும் கூட்டமின்றி அமைதியும் பெரும் சாந்நித்தியமும் கொண்டு விளங்கும் இந்தத் தென்னக பண்டரிபுரம், தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் உள்ள இந்த ஆலயம்.
எனவே மிக சுத்தமாகவும் தெய்விகத் தன்மையுடனும் பரமாரிக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் செல்பவர்கள் கட்டாயம் தரிசிக்கவேண்டிய அற்புத ஆலயம் இது.