வாழ்க்கைச் சக்கரத்தைப் பிரதிபலிக்கும் சிலை கரைப்பு தத்துவம்! | The Freedom Struggle Behind Vinayagar Chaturthi

Spread the love

மராட்டிய சாம்ராஜ்யத்தை ஆண்ட சத்ரபதி சிவாஜி, பேஷ்வா வம்சத்தைச் சேர்ந்தவர். விநாயகர் அவர்களின் குல தெய்வம். தனது மக்களின் நாட்டுப் பற்றினை வளர்க்க முற்பட்ட சத்ரபதி சிவாஜி, தெய்வ பக்தி, தேச பக்தி ஆகியவற்றை ஒன்றிணைத்து விநாயக சதுர்த்தியை மக்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் பண்டிகையாக மாற்றினார். 

ஆன்மீகம் கலந்த தேசியம் மகாத்மா காந்தியின் கொள்கை. அதன்படி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்களைத் திரட்ட, “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்ற கோஷத்தை முன் வைத்த சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் எடுத்த இடைவிடா முயற்சியால், கணேஷ் சதுர்த்தி குடும்பப் பண்டிகை என்ற நிலையிலிருந்து பொது கொண்டாட்டமாக உருவெடுத்தது. 

இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டன் அரசு சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, 1870 ஆம் ஆண்டு, 20 நபர்களுக்கு மேல் இருக்கும் கூட்டங்களைத் தடை செய்தது. ஆனால், வெள்ளிகிழமை மசூதியில் நடக்கும் பிரார்த்தனைக்கு கூட்டம் அதிகம் கூடும் என்பதால் இந்தத் தடைக்கு இந்திய முஸ்லீம்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆகவே, மத சம்பந்தமான கூட்டங்களுக்குத் தடை கிடையாது என்று அரசு அறிவித்தது.  

1893ஆம் ஆண்டு, மகாராஷ்ட்ரா புனே நகரில், இந்து சமயத்தின் பல உட் பிரிவுகளை. பிரிட்டன் அரசுக்கு எதிராக ஒன்றிணைக்கும் முயற்சியாக பாலகங்காதர திலகர் கணேச சதுர்த்தி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். இதைப் பற்றி, அவர் நடத்தி வந்த கேசரி என்ற  மராட்டி மொழி பத்திரிகையில் எழுதி மக்களைத் திரட்டினார். எல்லா இடங்களிலும் விநாயகரின் பெரிய சிலைகளை நிறுவி, அதில் அந்தப் பகுதி மக்களை ஈடுபடுத்தி, இந்த நிகழ்ச்சியை அறிவு பூர்வமான மற்றும் கலைகளை வளர்க்கும் நிகழ்ச்சியாக மாற்றினார் திலகர். இந்த கொண்டாட்டங்களில் ஆடல், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றன. ஆன்மீகப் போர்வையில், தலைவர்கள், தொண்டர்களுடன் கலந்து அரசியல் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள இந்த நிகழ்ச்சிகள் உதவின.

பூனே நகரில் ஆரம்பித்த இந்த சதுர்த்தி விழா, மகாராஷ்ட்ரா எங்கும் பரவி, தற்போது நாடு முழுவதும் நடை பெறும் விழாவாக உருவாகியுள்ளது.

சதுர்த்தி விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பத்து நாட்களும் பிள்ளையார் நம்மோடு இருந்து, நம் வேண்டுதலுக்கு செவி சாய்த்துப் பின் விடை பெருகிறார். பத்தாவது நாள் அனந்த சதுர்தசி. அன்று விநாயகர் பூஜை முடித்துப் பின் விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைப்பதுடன் சதுர்த்தி பூர்த்தி அடைகிறது. இதனை விசர்ஜன் என்பார்கள். 

விநாயகர் சிலையை நீர் நிலையில் கரைப்பது நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தைப் பிரதிபலிக்கிறது. உயிர் நீத்தவனின் புதைக்கப்பட்ட உடல் மண்ணுடன் கலக்கிறது அல்லது எரியூட்டப்பட்டால், அவனது சாம்பல் நீர் நிலைகளில் கரைக்கப் படுகிறது. மறுபிறப்பின் போது அவனுக்கு வேறு உடல் வந்து சேருகிறது.

இதைப் போலவே பூஜை முடிந்தவுடன், நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்ற, பிள்ளையார் பொம்மையின், மூலப் பொருளான களிமண் கரைந்து நீர் நிலையின் அடியில் தங்குகிறது. அடுத்த முறை, இந்தக் களிமண் கொத்தி எடுக்கப்பட்டு பிள்ளையார் சிலை செய்ய உபயோகிக்கப் படுகிறது. 

சுற்றுச் சூழல் மாசு படாத வகையில் விநாயக சதுர்த்தி கொண்டாடி மகிழ்வோம்.

-கே.என்.சுவாமிநாதன், சென்னை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *