கோவை, சுகுணாபுரம் மேற்கு புறவழிச்சாலை அருகே உள்ள மஞ்சிப்பள்ளம் காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் நிர்வாணமாக அழுகிய நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பெண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் குனியமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.

அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க கைகளில் பச்சை குத்திய பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்விற்காக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உயிரிழந்த பெண் யார்? பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.