India
oi-Vigneshkumar
ராய்ப்பூர்: E20 பெட்ரோல் காரணமாக வானங்கள் சேதம் அடைவதாகப் பரவலாக புகார் எழுந்தாலும் மத்திய அரசு அதை மறுத்தே வருகிறது. இதற்கிடையே E20 பெட்ரோலால் வாகனம் சேதமடைந்ததாக கூறி வழக்கு தொடர்ந்த வாகன உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. E20 பெட்ரோல் விவகாரத்தில் வழங்கப்படும் முதல் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு என்பதால் இது கவனம் பெறுகிறது.
மத்திய அரசு இப்போது நாடு முழுக்க E20 பெட்ரோலை தான் ஊக்குவித்து வருகிறது. இது தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்தாலும் கூட E20 பெட்ரோலையே மத்திய அரசு ஊக்குவிக்கிறது. இந்தச் சூழலில் தான் ராய்ப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நடந்த இந்த வழக்கில் வந்துள்ள தீர்ப்பு பேசுபொருள் ஆகியுள்ளது.

வழக்கு
இந்த வழக்கில் அந்த நபர் தனது காரில் E20 பெட்ரோலை நிரப்பிய சில நாட்களிலேயே பல்வேறு இன்ஜின் கோளாறுகள் ஏற்பட்டதாக கூறியிருந்தார். வாகனத்தின் செயல்திறன் குறைவது, இன்ஜின் மிஸ்ஃபயரிங், எரிபொருள் திறன் பாதிப்பு என பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த கோளாறுகளை சரிசெய்யப் பல முறை சர்வீஸ் செய்யப்பட்ட போதிலும், அதே பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால் தனக்கு கணிசமான தொகை செலவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் முக்கிய கேள்வி, வாகனத்தில் ஏற்பட்ட கோளாறுகளுக்கு E20 பெட்ரோல் காரணமா என்பதுதான். அதேநேரம் காரை தயாரித்த மாருதி சுசூகி மற்றும் சம்பந்தப்பட்ட டீலர், இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தனர். குறிப்பிட்ட கார் மாடல் E20 பெட்ரோலை பயன்படுத்தும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டதாகவும், இதனால் எரிபொருள் காரணமாக இன்ஜின் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் வாதிட்டனர். வழக்கமான தேய்மானம், பராமரிப்பு குறைபாடு அல்லது வேறு தொழில்நுட்ப காரணங்களால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
ஒரே பிரச்சினை
இருப்பினும், இந்த விளக்கத்தை நுகர்வோர் ஆணையம் முழுமையாக ஏற்கவில்லை. வாகன உரிமையாளர் பலமுறை சர்வீஸ் செய்த பிறகும், அதே பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்டதை ஆணையம் குறிப்பிட்டது. மேலும், “ஒரே பிரச்சினைக்காக மீண்டும் மீண்டும் காரை சர்வீஸ் விடும் நிலை ஏற்பட்டிருப்பது, அடிப்படை கோளாறு சரியாக தீர்க்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது.
மேலும், தற்போது நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல் மட்டுமே கிடைக்கிறது. எனவே, அதை தவிர்ப்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை. மாற்று எரிபொருள் கிடைக்காத சூழலில், நுகர்வோர் E20 பெட்ரோலை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை தரணும்
மாருதி சுசூகி நிறுவனமும் சம்பந்தப்பட்ட டீலரும் இணைந்து.. அந்த வாகனத்தை E20க்கு முழுமையாக செட் ஆகும்படி புதிய மாடலுக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் காரை மாற்றித் தர தவறினால், காரின் முழு வேல்யூவான ரூ.20.50 லட்சத்தை உரிமையாளருக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதோடு மன உளைச்சல் மற்றும் சிரமத்திற்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.10,000மும் வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தொகையை வழங்கவில்லை என்றால் நுகர்வோருக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
E20 பெட்ரோல்
மத்திய அரசு நாடு முழுவதும் E20 பெட்ரோல் பயன்பாட்டை ஊக்குவித்து வரும் நிலையில், இந்த தீர்ப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு பக்கம் E20 பெட்ரோல் எந்தவொரு இஞ்சின் பாதிப்பையும் ஏற்படுத்தாது என மத்திய அரசு சொல்கிறது. ஆனால், மக்களில் ஒரு தரப்பினர் இதனால் பல்வேறு பாதிப்பு ஏற்படுவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் ராய்ப்பூர் நுகர்வோர் ஆணையத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


