அந்த நிகழ்வுகள் மிக அழகான தருணம். மாணவர்கள் பகிர்ந்த நினைவுகளின் பல பகிர்வுகள் என் கண்களை கலங்க வைத்தது. குறிப்பாக நான் நடத்திய மதிப்பீட்டுக் கல்வி வகுப்புகள் குறித்து அவர்கள் பேசிய வார்த்தைகள்.
‘மேடம் இன்று நான் தன்னம்பிக்கை பெண்ணாக இருப்பதற்கு காரணம் நீங்கள். என் வாழ்வில் நான் சந்தித்த போராட்டங்கள் பல. அதிலிருந்து மீண்டு இன்று நான் செவிலியராக பணிபுரிகிறேன். என் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறேன். சோர்ந்த போதெல்லாம் நீங்கள் ஊக்குவித்த தருணங்களை நன்றியோடு நினைக்கிறேன்’ என்றாள்.
பல மாணவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்.
நீங்கள் வழிகாட்டிய பாதையில் நாங்கள் நல்ல மனிதர்களாக வாழ்கிறோம்.
பிறரின் உணர்வுகளை மதிக்கவும் சமூகப் பொறுப்புணர்வோடும் நடக்கக் கற்றுக் கொடுத்தீர்கள்.
தீபாவளி தருணத்தில் நீங்கள் கற்றுக்கொடுத்த எளியோரை தேடிச் சென்று அவர்களின் தேவைகளை இன்றும் பூர்த்தி செய்யும் பணி செய்கிறோம்.
ரத்த தானம் தொடர்ந்து செய்கிறோம்.
முதியோரை மதிக்கிறோம். முதியோர் இல்லங்கள் செல்கிறோம்.
நீங்கள் கற்றுக் கொடுத்த மதிப்பீடுகள் எங்கள் வாழ்வில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எங்களின் தனித் திறமைகளை நீங்கள் ஊக்குவித்ததால் எங்களின் சொந்தக்காலில் நின்று தொழில் செய்கிறோம்.
நான் என்ற அகந்தை நீக்க கற்றுக் கொடுத்தீர்கள் (10 வருடங்களுக்கு முன் நான் சொன்ன கதை கூறி இக்கருத்தை ஒரு மாணவன் கூறினான்.)
அனைத்திற்கும் மேலாக அனைத்து மாணவர்களும் “மேடம் நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்” என்ற செய்தி என்னை நெகிழ்ச்சி அடைய வைத்தது.
இந்தச் செய்தியை விட ஒரு ஆசிரியருக்கு என்ன உயரிய விருது கிடைத்துவிடும்?
ஒரு ஆசிரியரின் உண்மையான வெற்றி மாணவர்கள் உயர்ந்த பதவிகளை அடைவதில் மட்டுமல்ல. நல்ல மனிதர்களாக வாழ்வதில் தான் உள்ளது. கல்வி என்பது ஓர் புனிதப் பயணம் என்பதை மாணவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.