வேலூர் தெற்கு காவல் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாகவந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் மதுபோதையில் இருந்தார்.
போலீஸாரின் விசாரணையில், அவர் வேலூர் சூரியகுளத்தைச் சேர்ந்த விஜயன் (43) எனத் தெரியவந்தது. அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி, மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து, அபராதத் தொகையை வேலூர் நீதிமன்றத்தில் செலுத்தும்படியும் தெரிவித்தாராம்.
அதை ஏற்காத விஜயன் தன் மீது `வழக்கு பதிவு செய்யக் கூடாது’ என்று சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்தாராம். இதுபற்றி, செல்போனில் தனது குடும்பத்தினரிடமும் தெரிவித்தாராம் விஜயன்.

உடனடியாக அவரின் மனைவி, 2 மகன்களும் அங்கு வந்திருக்கின்றனர். விஜயன் உட்பட 4 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணியை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அப்போது, விஜயனும், அவரின் மூத்த மகன் யுவராஜ் (21) என்பவரும் சேர்ந்து கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை கவனித்த மற்ற போலீஸார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து, தாக்குலுக்கு ஆளான சப்-இன்ஸ்பெக்டரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, விஜயன் மற்றும் அவரின் மகன் யுவராஜ் ஆகியோரைக் கைது செய்தனர்.