சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 41 இடங்களில் இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கர்ணாவூரில் அமைந்துள்ள தி.மு.க பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலுக்குச் சொந்தமான மதுபான ஆலையில், காலை முதல் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 8 மணி அளவில் தொடங்கிய இந்தச் சோதனையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிகாரி சித்ரா தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மது ஆலையில் சோதனை நடத்தப்படுவதால் மன்னார்குடி பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் சோதனை நடக்கும் மது ஆலையைச் சுற்றி தி.மு.க-வினர் திரண்ட வண்ணம் இருப்பதால், மன்னார்குடி நகர போலீஸார் அப்பகுதியில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் சில மதுபான ஆலை நிறுவனங்களும் (Distillery Companies) சேர்க்கப்பட்டிருந்தன.