`கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டும் ஆளைப் பார்த்து குழந்தை நிச்சயம் மயங்கும்; ஆனா.!” – உதயநிதி

Spread the love

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “தேர்தல் முடிவுக்கு பிறகு, நம்முடைய தலைவர் கலந்து கொள்கின்ற முதல் நிகழ்ச்சி இது. இன்றைக்கு ஒரு சாதாரண திருமண நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், நம்முடைய கட்சி நிகழ்ச்சியாக எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யார் எந்த பக்கம் போனாலும், எந்த மாவட்டம் எந்த முடிவு எடுத்தாலும், டெல்டா எப்பொழுதுமே தி.மு.க பக்கம்தான் என்பதை நிரூபிச்சு காட்டிய அத்தனை பேருக்கும் முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழா

திருவாரூர் மாவட்டத்தில் நம்முடைய திமுக வளர்வதற்கு ஸ்ட்ராங்கான பேஸ்மென்ட்டை போட்டவர் கலைஞர். அவரை நீங்க என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டீங்க.

திருவாரூர் மாவட்டம் மட்டும் இல்ல, ஒட்டுமொத்த டெல்டாவுமே இன்னைக்கு திமுக-வின் கோட்டையாகத்தான் விளங்கி கொண்டிருக்கிறது. டெல்டா பகுதியின் அரசியல் வரலாற்றில் பூண்டி கலைச்செல்வன் பெயர் என்றைக்குமே நிலைத்து நிற்கும்.

இன்றைக்கு அவர் வழியில், அவருடைய தம்பி, அண்ணன் கலைவாணன், அவருடைய மகன் தம்பி கலைவேந்தன் என ஒட்டுமொத்த குடும்பமும் கட்சிக்கு களத்தில் இறங்கி உழைச்சுக்கிட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்ததில் எனக்கு மிகுந்த பெருமை.

தமிழ்நாடு முழுக்க இது மாதிரியான லட்சக்கணக்கான கட்சி குடும்பங்கள் இருப்பதால் தான் கட்சி எவ்வளவு பெரிய புயலைச் சந்தித்தாலும் நாம் திரும்பத் திரும்ப மீண்டு வருகிறோம். உங்களுடைய எழுச்சியையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் பார்க்கும்போது திமுக மீண்டும் வெற்றி வாகை சூடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

கலைஞர் சொன்ன மாதிரி, திமுக வெறும் அரசியல் இயக்கம் கிடையாது, வெறும் ஒரு கட்சி கிடையாது. அது ஒரு சமுதாய இயக்கம். தேர்தலில் வெற்றி தோல்விங்கிறது எல்லாம் சகஜம். மற்ற கட்சிகளைத்தான் அவை பாதிக்கும். சமுதாய இயக்கம் என்பதால் எப்போதும் போல் மக்கள் பணிகளைத் தொடர்ந்து செஞ்சுக்கிட்டுதான் இருப்போம்.

திருமண விழாவில் ஸ்டாலின்

ஒரே வரியில சொல்லணும்னா, தேர்தல் அரசியலில் தான் நாம் தோற்றிருக்கோம், வெற்றி வாய்ப்பை இழந்திருக்கோம். கொள்கை அரசியல்ல திமுக என்றைக்குமே தோற்றது கிடையாது, தோற்கவும் மாட்டோம். எனவே உடன்பிறப்புகள், நாம மீண்டும் எப்போதும் போல நம்முடைய களப்பணியை, மக்கள் பணியைத் தொடர்வோம்.

ஆளுங்கட்சியாக இருந்தப்ப மட்டும் இல்லாம, எதிர்க்கட்சியா இருக்கப்போகும் நமக்கும், நமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாம, வாக்களிக்காமல் போன மக்களுக்கும் சேர்த்தே நாம் உழைப்போம். தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்துகளை எல்லாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். மாநில உரிமைகளை நிச்சயம் காப்போம். இந்த பத்து நாட்களிலேயே மக்கள், பல பெண்கள், இளைஞர்கள் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணர்ந்திருப்பாங்க. போகப் போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரிய வரும்.

கலைஞர் சொன்ன ஒரு உதாரணத்தை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். தாயின் பாதுகாப்பில் இருக்கக்கூடிய ஒரு குழந்தை, கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டுகிற ஒரு ஆளைப் பார்த்து நிச்சயம் மயங்கும், மகிழ்ச்சியடையும். தாய்கிட்ட இருந்து தாவி அந்த கிலுகிலுப்பை ஆட்டுறவன்கிட்ட கொஞ்ச நேரம் போய் உட்கார்ந்துக்கும். ஆனா அந்தக் குழந்தை கிலுகிலுப்பை காட்டுறவன்கிட்ட நிரந்தரமா இருக்காது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அதுக்கு உண்மையான பாசம்னா என்னன்னு தெரியும். தாயோட முகத்தை நிச்சயம் தேடிப் பார்க்கும். தாய்கிட்டத்தான் மீண்டும் திரும்பி வரும்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அது மாதிரி இப்ப கவர்ச்சி, மாயாஜாலத்தைக் காட்டி மக்களைச் சிலர் ஈர்த்துள்ளனர். இந்த கவர்ச்சி மக்களுடைய கஷ்டத்தைப் போக்காது. அடிப்படைப் பணிகளை நிறைவேற்றாது. எந்தப் பிரச்னைக்கும் அது தீர்வு காணாது. எனவே தாயோட அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை அப்படிங்கிறத அந்தக் குழந்தை மீண்டும் உணர்ந்து, தமிழ்நாட்டுக்குத் தாயாக இருக்கக்கூடிய நம்முடைய கழகத்தை, நம்முடைய தலைவரை நோக்கி நிச்சயம் அந்தக் குழந்தை விரைவில் வரும். நம்முடைய தலைவர் சொன்னது போல சூரியன் ஒருபோதும் மறையாது, அது மறுபடியும் உதிக்கும். அதன் ஒளியில தமிழ்நாடு மீண்டும் செழிக்கும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *