International
oi-Prasanna Venkatesh
அமெரிக்காவும் ஈரானும் இடையில் மாதக்கணக்காக நிலவி வந்த மோதலும், போர் நிறுத்த பேச்சுவாத்தையும் முடிவு கட்டும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே விரிவான அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. சுமார் 39 முறை டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தம் நெருங்கியுள்ளது என கருத்து நிலவி வந்த நிலையில் தற்போது ஈரான் தரப்பிலும் இது கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டதாகவே தகவல் வெளியாகியிருக்கும் காரணத்தால் முதலீட்டு சந்தையும் பெரிய அளவில் ரியாக்ட் செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை மீட்டெடுக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஈரானுக்கு 300 பில்லியன் டாலர்
இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக அமெரிக்கா 300 பில்லியன் டாலர் அளிக்க உள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஈரானின் 24 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விவரங்கள், அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் வான்ஸ் முன்னர் கூறிய “ஈரானுக்கு எந்த நிதியும் கொடுக்க மாட்டோம்” என்ற அறிவிப்புகளுக்கு முரணாக உள்ளது. இதனால் ஒப்பந்தத்தின் உண்மையான விவரங்கள் குறித்து சர்வதேச அளவில் குழப்பம் நிலவி வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு
மேலும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க போடப்பட்ட கடற்படை முடக்கத்தை நீக்குவதும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், ஈரான் வைத்துள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்றிய பிறகு, எண்ணெய் போக்குவரத்து இரு தரப்பிலும் மீண்டும் தொடங்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் சந்தைக்கும், பிராந்திய நாடுகளுக்கும் பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கையெழுத்து ஜூன் 19-ம் தேதி
இந்த போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்திற்கான கையெழுத்திடம் நிகழ்ச்சி வரும் ஜூன் 19, 2026 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட கூட்டங்கள் முன்னதாக நடைபெறும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில், லெபனானில் உள்ள அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதும் இடம்பெற்றுள்ளது மிக முக்கியமானது.
இந்த ஒப்பந்தத்தை எட்டுவதில் பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முக்கிய பங்காற்றியதாக ஷெரீப் பாராட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கு பகுதியில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் தலைமைத்துவமும் இந்த முயற்சியில் உறுதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், மத்திய கிழக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் பதற்றம் குறையும் என்றும், உலகளாவிய எண்ணெய் விலை உறுதிப்படும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.