இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘டோரதி’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடல், வழக்கமான மெலடி பாணியைத் தாண்டி, கேட்பவர்களை இசை மயக்கத்தில் ஆழ்த்தும் ‘Raaja Trance’ அனுபவமாக இருக்கும் என படக்குழு குறிப்பிட்டுள்ளது.
“டோரதி” – கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் – இசை இளையராஜா :
மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா முழுமையான இசையமைப்பை மேற்கொண்டுள்ளார்.
“கல்யாண விருந்து” விருந்தளித்த முதல் பாடல்:
இந்த படத்தின் முதல் பாடலான ‘கல்யாண விருந்து’ பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாட்டுப்புற இசையின் தாக்கத்துடன் உருவான அந்தப் பாடல், திருமண விருந்து மற்றும் கொண்டாட்ட மனநிலையை மையமாகக் கொண்ட ‘Wedding Paattu’ பாணியில் அமைந்திருந்தது. அந்தோணி தாசன், யுகேந்திரன் மற்றும் பிரியா ஜெர்சன் ஆகியோர் பாடியிருந்தனர்.
இளையராஜாவின் வின்டேஜ் பாணியில் ஒரு நாட்டுப்புற இசையுடனும், அவரின் வரிகளில் வெளிவந்து ரசிகர்களை குத்தாட்டம் போடா வைத்தது முதல் பாடலான “கல்யாண விருந்து”.
கிறங்கடிக்கும் “முத்துமணி” 2வது பாடல்:
முதல் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பும் நிலையில், நேற்று படக்குழு இரண்டாவது சிங்கள்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த பாடலுக்கு “முத்துமணி” என்று தலைப்பும், “Raja Trance” என்ற டேக்லைனுடன், இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, தற்போது இந்த பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலின் வரிகளை இளையராஜா எழுதியுள்ளார். மேலும் இந்த பாடலை ஸ்வேதா மோகன் மற்றும் இளையராஜா பாடியுள்ளனர். இந்த பாடல் வீடியோவில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடித்துள்ளதை தாண்டி, இளையராஜாவும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை ஆராவாரத்தில் ஆழ்த்தியுள்ளது.
“Raja Trance” ஆக்கும் 2nd சிங்கள்:
‘முத்துமணி’ பாடலின் இசை அமைப்பில் இளையராஜாவுக்கே உரிய ஆர்க்கெஸ்ட்ரேஷன் நுணுக்கங்கள் கவனம் பெறுகின்றன. பாடலின் மையத்தில் இருக்கும் மெலடி வரியுடன் பின்னணியில் நகரும் ஸ்ட்ரிங் லேயர்கள், தாள இசையின் தொடர்ச்சியான இயக்கம் மற்றும் இடையிசைகளில் வரும் இசைக் கட்டமைப்புகள் பாடலுக்கு ஒரு மிதக்கும், ட்ரான்ஸ் போன்ற உணர்வை உருவாக்குகின்றன.
குறிப்பாக, ஸ்ட்ரிங் இசையின் அடுக்குகள் பாடலின் மெலடி மற்றும் ரிதமுக்கு இடையே பாலமாக செயல்படுவதுடன், பாடல் முன்னேறும் போதெல்லாம் அதன் உணர்வை படிப்படியாக உயர்த்துகின்றன. இதனால் பழைய கால ஆர்க்கெஸ்ட்ரா சுவையும், இன்றைய தினம் கேட்பவர்களை ஈர்க்கும் ட்ரான்ஸ் உணர்வும் இணைந்த இசை அனுபவமாக ‘முத்துமணி’ அமைந்துள்ளது.
பாடலின் இசை மற்றும் வரிகளை இளையராஜாவே கவனித்துள்ள நிலையில், இதன் மியூசிக் வீடியோவை பரத் முரளிதரண் இயக்கியுள்ளார். இசையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ, ‘டோரதி’ படத்தின் உலகத்தையும் கதாபாத்திரங்களின் மனநிலையையும் மேலும் அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஒருபுறம் ‘கல்யாண விருந்து’ மூலம் நாட்டுப்புற இசையின் கொண்டாட்டத்தை காட்டியுள்ள இளையராஜா, மறுபுறம் ‘முத்துமணி’ மூலம் ட்ரான்ஸ் மற்றும் ஆர்க்கெஸ்ட்ரல் இசையின் வேறொரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் இசையும் தற்போது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

