International
oi-Nantha Kumar R
காத்மாண்ட்: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி இன்று வரை 625 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 2,478 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில தான், வெள்ளம் பாதித்த நேபாளத்தை மீண்டும் புனரமைக்க 5 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்தியர்கள் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த 400க்கும் அதிகமானவர்கள் சிக்கினர். அதேபோல் உள்நாட்டை சேர்ந்தவர்களும் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். ஏராளமான வீடுகள், கார் உள்பட பல வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

மொத்தம் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தண்ணீர் அடித்து செல்லப்பட்டனர். சுற்றுலாவிற்கு சென்றவர்கள், நீர்மின் நிலையத்தில் பணியாற்றியோர், வீடுகளில் இருந்தோர் என்று பலரும் பெருவெளத்தில் சிக்கி மாயமாகினர்.
தமிழகத்தை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் உள்பட இந்தியாவை சேர்ந்த 500க்கும் அதிகமானவர்கள் வெள்ளத்தில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. இன்று மதியம் நிலவரப்படி மொத்தம் 626 பேர் வரை பலியாகி உள்ளனர். அதேவேளையில் இன்னும் 2,478 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தான் நேபாளத்தை மீண்டும் புனரமைப்பு செய்ய பல ஆயிரம் கோடி தேவை என்று அந்த நாட்டின் நிதி அமைச்சர் டாக்டர் ஸ்வார்மின் வாகேலே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: ”நேபாளத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க 4 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவு ஏற்படும்” என்று கூறியுள்ளார். 5 பில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாயில் ரூ.47,755 கோடியாகும்.