International
oi-Halley Karthik
காத்மாண்டு: நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது 10 நாட்களுக்கு பிறகு இரண்டு பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.
திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த லுஹைடாவ் என்ற சீன தொழிலாளி, 10 நாட்களுக்கு பிறகு இன்று உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். நேபாள ராணுவமும் தென் கொரியாவை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து இந்த கூட்டு மீட்பு பணியை மேற்கொண்டிருந்தனர்.

நுவாகோட் பகுதயில் உள்ள இடிந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சந்திரிகா ஸ்ரேஸ்தா என்ற 64 வயது பெண்மணியும் இன்று மீட்கப்பட்டிருக்கிறார். உயிருடன் மீட்கப்பட்ட அவர், கூடுதல் மருத்துவ சிக்கிச்சைக்காக விமானம் மூலம் காத்மாண்டுவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். நேற்றைய தினம் இதேபோல சுரங்க பகுதியில் இருந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர்.
கடந்த 26ம் தேதியன்று பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக போட் கோஷி ஆற்றின் கரையோர பகுதியில் இருந்த மொத்த குடியிருப்புகளும் காணாமல் போயிருக்கின்றன. இதுவரை 1300க்கும் அதிகமானோரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. 5000க்கும் அதிகமானோர் இன்னும் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பல்வேறு நீர்மின் திட்டப் பகுதிகளில் பணியாற்றிய சுமார் 900 தொழிலாளர்கள் இன்னும் காணவில்லை. அதில் சுமார் 500 பேர் வெவ்வேறு சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் நேபாள குழுவுடன் இணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நேபாள வெள்ளம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 7,500 வீடுகளை வெள்ளம் அடித்து சென்றிருக்கிறது. 7,000 வீடுகளை மீண்டும் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. 40 கி.மீ நீளத்திற்கு சாலையும், 30க்கும் அதிகமான மேம்பாலங்களும் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் எனில் குறைந்தது 1-2 ஆண்டுகள் வரை ஆகும்.
இது தவிர திரிசூலி உள்ளிட்ட 12க்கும் அதிகமான நீர்மின் திட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் 10% மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. நுவாகோட் பகுதியில் சுமார் 2.2 மிலியன் டன் சேறும், சகதியும் இருக்கிறது. இதை அப்புறப்படுத்துவதே பெரிய சிக்கலான விஷயமாகும்.