வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து வனப்பகுதிகளில் நெகிழிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் 90 தன்னார்வலர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டு மாங்கரை – ஆணைகட்டி வனச்சாலை, வால்பாறை, அனுவாவி சுப்பிரமணியர் கோவில் வனப்பகுதி, கோவை குற்றாலம் உள்ளிட்ட 9 இடங்களில் களப்பணிகள் நடத்தப்பட்டு, 7,685 கிலோ நெகிழிக் கழிவுகளும், 6,110 கிலோ மதுபானக் கண்ணாடி பாட்டில்களும் என மொத்தம் 13,795 கிலோ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இது குறித்து அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மு. நவின் குமார், உடைந்த கண்ணாடி பாட்டில்களால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை விளக்கினார். யானைகளின் கால்களில் கண்ணாடித் துண்டுகள் குத்தி காயமேற்பட்டு, தொற்று ஏற்பட்டு, 30 முதல் 35 நாட்களுக்குள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.