மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய “ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) மதிப்பீட்டு முறையில் இருந்த குளறுபடியைச் சுட்டிக்காட்டிய டெல்லி மாணவர் ஒருவர், சமூக வலைதளங்களில் “பாகிஸ்தானி” என்றும் “தேச விரோதி” என்றும் கடுமையாகத் தூற்றப்பட்டார். இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த மாணவரின் ரோல் எண்ணுக்குத் தவறான விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டதை சிபிஎஸ்இ வாரியம் ஒப்புக்கொண்டதையடுத்து, மாணவரின் குற்றச்சாட்டு உண்மையென நிரூபணமாகியுள்ளது.
திங்களன்று, மாணவர் வேதாந்த் ஸ்ரீவஸ்தவாவுக்கு சிபிஎஸ்இ இணைச் செயலாளர் (ஒருங்கிணைப்பு) அனுப்பிய மின்னஞ்சலில், விடைத்தாள் மாறியதை ஒப்புக்கொண்டு, அவரது மதிப்பெண்கள் விரைவில் திருத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்தொடர்பை HT செய்தி நிறுவனம் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத மூத்த சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் இந்தத் தவறை உறுதிப்படுத்தினார். ஆனால், இந்த குளறுபடி ஏன் நிகழ்ந்தது என்பது குறித்து விளக்க மறுத்துவிட்டார். “நாங்கள் வேதாந்த் ஸ்ரீவஸ்தவாவிடம் பேசிவிட்டோம். சரியான விடைத்தாளின் நகலை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளோம். அதற்கேற்ப அவரது மதிப்பெண்கள் புதுப்பிக்கப்படும்” என்று மட்டும் அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை
மே 13 அன்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானபோது, இயற்பியல் பாடத்தில் “எதிர்பாராதவிதமாகக் குறைந்த மதிப்பெண்கள்” பெற்றதாக வேதாந்த் கூறுகிறார். இதைத் தொடர்ந்து, தனது விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுக்காக மே 19 அன்று அவர் விண்ணப்பித்தார்.
மே 23 அன்று அவருக்குக் கிடைத்த நகல்களில், தனது ரோல் எண்ணுக்கு எதிராகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இயற்பியல் விடைத்தாள் தன்னுடையது அல்ல என்பதை வேதாந்த் கண்டறிந்தார். உடனடியாக ‘X’ (முன்னர் டுவிட்டர்) சமூக வலைதளத்தில், தனது ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் விடைத்தாள்களின் கையெழுத்துடன், இயற்பியல் விடைத்தாளின் கையெழுத்தை ஒப்பிட்டுப் படங்களைப் பதிவிட்டார். “ஒரு வருடம் முழுவதும் இதற்காகப் படித்தேன். தூக்கம், மன அமைதி, நண்பர்களுடன் சுற்றுவது என அனைத்தையும் தியாகம் செய்தேன். இப்போது எனது உண்மையான இயற்பியல் தாள் திருத்தப்பட்டதா என்பதே எனக்குத் தெரியவில்லை. மாணவர்களுக்கு இதுதானா தகுதி?” என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.